மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (13) இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பெரும்போக விவசாய செய்கையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டன.
இந்த கலந்துரையாடலின்போது மட்டக்களப்பு மாவட்ட சமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் எஸ். ஜெகநாதன், மாவட்ட விவசாயத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எஸ். பேரின்பராஜா, மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் வீ. இராஜகோபாலசிங்கம், பிராந்திய நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், தேசிய உர செயலக உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள், விவசாய மற்றும் கமநல அமைப்பின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்களாக, விவசாயிகளுக்கு அரச வங்கி கடன்கள் வழங்குதல், கடந்த சிறுபோக நெற் பயிர்ச் செய்கையின் முன்னேற்ற அறிக்கை, பெரும்போகத் திட்டமிடல் தொழில்நுட்ப நடவடிக்கைகள், விதை நெல் உரம் வழங்குதல், விவசாயிகளின் வரட்சி நிவாரண காப்புறுதிகள், நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்குதல், பெரும்போகத்தின்போது ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தங்களை தடுத்தல், உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவுகள் எட்டப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு பெரும்போக நெற் செய்கையின்போது அரச வங்கிகளில் விவசாய கடன் ஒரு ஏக்கர்கருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் 20 ஏக்கர் வரை வழங்கப்பட உள்ளத்துடன், கடந்த வருடத்தில் அரச வங்கிகளுடாக 150 மில்லியன் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதுடன் இவ்வருடம் 250 மில்லியன் ரூபாய் வரை விவிசாயக் கடன் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மற்றும் மத்திய வங்கியின் புதிய விவசாய கடன் திட்டத்தின் ஊடாக விவசாய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்குரிய கடன் வசதிகளும் இம்முறை வழங்கப்பட உள்ளன.
இதேவேளை தனியார் வங்கிகள் ஊடாகவும் கடந்த வருடம் 400 பயனாளிகளுக்கு சுமார் 250 மில்லியன் ரூபாய் வரை கடன் உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.
இதேவேளை விவசாய அமைச்சினூடாக கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெரும்போக செய்கையின்போது விவசாயிகளுக்கு நீரை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்காக 100 சிறிய குளங்களை புணரமைப்பதற்காக சுமார் 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாகாணத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment