மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சமையலறையில் தினமும் 1500 பேருக்கு சமைக்கின்றார்கள். குறிப்பாக மதிய வேளையில் குறைந்தது 700 பேருக்கு குறையாமல் சமைக்கின்றனர். பலதரப்பட்ட நோயாளர்களின் உணவு வகைகள் மற்றும் ஊழியர்களுக்கான உணவுகள் இவற்றுள் அடங்கும். ஆனால் அவற்றை சமைப்பதற்கு தகுத்த ஆளணி பற்றாக்குறை பல வருட காலமாக நிலவி வருகின்றது. அதிலும் தேர்ச்சி வாய்ந்த சமையல்க்காரர் அங்கு ஒருவர் மாத்திரமே உள்ளார். சமையலறைக்கு தேவையான தகுந்த ஆளணிகளை உருவாக்குவது மிகவும் அவசியமானதாக உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (8) இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, சமயலறைக்கு போதியளவிலான சமையலறை உபகரணங்கள் மற்றும் அதற்குரிய அத்தியாவசிய அடிப்படை வசதிகள் அங்கு காணப்படவில்லை. அதற்கான கோரிக்கைகள் அமைச்சிடம் கொடுக்கப்பட்டும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
நாளாந்தம் சமையலுக்கு தேவையான பொருட்களை மரக்கறி, பலசரக்கு, பாண், முட்டை அடங்கலாக அன்றைய நாட்களிலே வைத்தியசாலை நிர்வாகம் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் அவ் பொருட்களை ஒப்பந்ததாரர் நேரம் தாழ்த்தியே விநியோகிக்கின்றார்.
அமைச்சரின் அனுசரணையுடனே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் என தெரியவந்துள்ளது. அதிலும் நிர்வாகத்தினர் கோரிய நிறைக்கு குறைவான அநேக பொருட்களையே அநேக சமயங்களில் விநியோகம் செய்கின்றனர்.
மதிய உணவுக்கான மரக்கறி மற்றும் பலசரக்கு பொருட்கள் பல தடவைகள் காலை 09.30 மணிக்கு பின்பும், இரவு உணவுக்கான பொருட்கள் மாலைவேளையும் விநியோகம் செய்யப்படுகின்றது.
விநியோக நடவடிக்கையிலும் பல குறைபாடுகள் அசமந்த போக்கு காணப்படுகின்றன. மீன் மற்றும் இறைச்சி விநியோகமும் மிகவும் காலம் தாழ்த்தியே விநியோகிக்கப்படுகின்றது. நோயாளர்களுக்கான மதிய உணவு 12.30 மணிக்கு வழங்கப்பட வேண்டும். அவ்விநியோக நடவடிக்கை தடைப்படின் அன்றையதினம் அனைத்து நோயாளிகளும் ஊழியர்களும் பட்டினியாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
பல நேரங்களில் விடுதியில் உள்ள நோயாளர்களுக்கு உணவு நேரம் தாழ்த்தி வழங்கப்படுவதும் கவனத்தில் கொண்டுவரப்படுள்ளது. மதிய உணவுக்கான நடவடிக்கைகள் காலை 9.30 மற்றும் 10.00 மணிக்கு பின்னரே நடைபெறுகின்றது.
குறிப்பிட்ட நேரத்திக்குள் 3 மணித்தியலங்களுக்குள் நூற்றுக்கணக்கனவர்களுக்கு அதிலும் பல்வேறுபட்ட நோயாளர்களுக்கு தேவையான உணவு வகைகளை சரியான முறையில் தயாரிப்பது என்பது மிகவும் ஆச்சரியமாக படுகின்றது.
அதனால் உணவின் தரம் சுவை மற்றும் சுகாதாரம் என்பன கேள்விக் குறியாக்கப்படுகின்றது. அத்துடன் நோயாளர்களுக்கு உணவு வழங்கும்போது சில விடுதிகளில் சரியான முறைகளை கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் நோயாளர்களிடம் இருந்தும் எழுந்துள்ளது.
இதனால் பாதிக்கப்படுவது தூர இடங்களில் இருந்து சிகிச்சைக்காக வரும் எமது மக்களே. இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். வைத்தியசாலை நிர்வாகமானது புதிய கட்டிடங்கள் மற்றும் புதிய வசதிகளை மேம்படுத்த எடுக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது அதேநேரம் இவ் அத்தியாவசியமான உணவு விடயத்திலும் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
No comments:
Post a Comment