கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு 144 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட அடுக்குமாடி நிர்மாணிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 10, 2023

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு 144 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட அடுக்குமாடி நிர்மாணிப்பு

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகளுக்காக 144 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட அடுக்குமாடித் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, நாரஹேன்பிட்டி, காலிங்க மாவத்தையில் அமைந்துள்ள இந்த வீட்டுத் தொகுதி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டுத் தொகுதியை கொழும்பு பல்கலைக்கழகத்திடம் ஒப்படைப்பதற்கான அமைச்சரவைப்பத்திரம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டுத் தொகுதியானது சுமார் 800 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கும்.

450 சதுர அடியைக் கொண்ட இந்த வீடு இரண்டு படுக்கையறைகள் கொண்டது. தற்போது இந்த வீட்டின் பெறுமதி சுமார் 60 இலட்சம் ரூபா என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

இந்த விடுதி வீட்டுத் தொகுதி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு இலவச மானியமாக கொடுக்கப்படுகின்றது.

விடுதி வசதிகள் இன்மையால் பல பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த காலங்களில் மிகவும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர். சில சமயங்களில் பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் கூட நடந்தன.

அரசாங்கத்தின் உதவியுடன் விடுதிகளை நிர்மாணிப்பதன் மூலம் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

தொலைதூர இடங்களில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கும் இவ்வாறான விடுதிகளை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை விரைவாக தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முனீரா அபூபக்கர்

No comments:

Post a Comment