பாலம் நிர்மாணிக்கும் யோசனை நாட்டின் அரசியலமைப்பை சவாலுக்குட்படுத்தும் : சட்ட நிபுணர்கள் விசேட கவனம் செலுத்தி உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் - சரித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 30, 2023

பாலம் நிர்மாணிக்கும் யோசனை நாட்டின் அரசியலமைப்பை சவாலுக்குட்படுத்தும் : சட்ட நிபுணர்கள் விசேட கவனம் செலுத்தி உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் - சரித ஹேரத்

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையையுடன் இந்தியாவை இணைக்கும் வகையில் பாலம் நிர்மாணிக்கும் யோசனை நாட்டின் அரசியலமைப்பை சவாலுக்குட்படுத்தும். பிற நாட்டுகளுடன் இலங்கையை இணைக்கும் வகையில் பாலம் நிர்மாணித்தால் இலங்கை ஒரு தீவு நாடு என்ற நிலையில் இருந்து நீக்கப்படும். ஆகவே இவ்விடயம் குறித்து சட்ட நிபுணர்கள் விசேட கவனம் செலுத்தி நாட்டு மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் தற்போது பிரதான பேசு பொருளாக உள்ளது.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்க வேண்டுமாயின் அது தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பேராயர் கர்திகால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் அனுமதியை பெறாமல் இலங்கையை பிறிதொரு நாட்டுடன் உட்கட்டமைப்பு துறை ஊடாக ஒன்றிணைக்க முடியாது. ஏனெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்களாணை கிடையாது என மதத் தலைவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது முக்கியமானதொரு விடயமாகும்.

இலங்கை ஒரு தீவு நாடு. பிறிதொரு நாட்டுடன் பாலம் ஊடாக ஒன்றிணையும்போது தீவு நாடு என்பதற்கான அம்சங்கள் இல்லாமல் போகும். அது நாட்டின் இருப்புக்கும், சர்வதேச அங்கிகாரத்துக்கும் பாதிப்பு ஏற்படும். நாட்டின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் தன்மையில் இந்த பாலம் நிர்மாணிப்புத் திட்டம் காணப்படுகிறது.

நாட்டின் பூமியை பிறிதொரு நாட்டுடன் ஒன்றிணைக்கும்போது அரசியலமைப்பு ரீதியில் முரண்பாடுகள் தோற்றம் பெறும். இவ்விடயம் தொடர்பில் சட்ட நிபுணர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் அரசியலமைப்பின் 5 ஆவது பிரிவில் 'ஸ்ரீ லங்கா ஜனநாயக சோசலிச குடியரசு என்ற தேசம் 25 மாவட்ட நிர்வாக அலகுகளை கொண்டுள்ளதுடன் வரையறுக்கப்பட்ட நீர் எல்லை பகுதியையும் கொண்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய நீர் எல்லை தொடர்பில் அரசியலமைப்பின் 170 ஆவது அத்தியாயத்தில் 'சர்வதேச கடல் எல்லை பரப்புக்குள் இலங்கையின் தேசிய கடல் எல்லை உள்ளடக்கப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் காலத்தில் கச்சத்தீவு விவகாரம் பற்றி பேசும் பொழுது வடக்கு பகுதியின் கடல் எல்லை பகுதி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அரசியலமைப்பின் 5 ஆவது பிரிவு மற்றும் 170 ஆவது அத்தியாயம் என்பன இலங்கை - இந்திய பாலம் நிர்மாணிப்பு யோசனைக்கு முரணானது. ஆகவே இவ்விடயம் குறித்து சட்ட நிபுணர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும். அரசியலமைப்பை சவாலுக்குட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான அவதானம் குறைவான மட்டத்தில் காணப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடனான நல்லுறவை முகாமைத்துவம் செய்வதில் தவறான போக்கை கடைப்பிடிக்கிறது.

கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் இதுவரை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை. மக்களுக்கு அறிவிக்காமல் இரகசியமான முறையில் ஒப்பந்தங்கள் செயற்படுத்தப்படுகின்றன என்றார்.

No comments:

Post a Comment