ஜனாதிபதித் தேர்தல் முடிவை இரத்து செய்து, அதிகாரத்தை கைப்பற்றியது காபோன் இராணுவம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 30, 2023

ஜனாதிபதித் தேர்தல் முடிவை இரத்து செய்து, அதிகாரத்தை கைப்பற்றியது காபோன் இராணுவம்

காபோனின் ஜனாதிபதித் தேர்தலில் அலி போங்கோ ஒன்டிம்பா மீண்டும் வெற்றியீட்டியுள்ளார். ஆனால், அந்நாட்டு இராணுவம் தேர்தலை இரத்துச் செய்வதாவும் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாகவும் இன்று (30) அறிவித்துள்ளது.

மத்திய ஆபிரிக்க நாடான கபோனில் கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை எனக்கூறி ஆட்சியை கைப்பற்றியதாக தொலைக்காட்சியில் தோன்றிய மூத்த இராணுவ அதிகாரிகள் குழு ஒன்று அறிவித்துள்ளது.

இன்று (30) காலை ‘கபோன் 24’ தொலைக்காட்சியில் தோன்றிய இந்த இராணுவ அதிகாரிகள் தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்வதாகவும், அனைத்து அரச நிறுவனங்களையும் கலைப்பதாகவும் நாட்டின் எல்லைகள் மூடப்படுவதாகவும் அறிவித்தனர்.

நாட்டின் அனைத்து பாதுகாப்பு படைகளையும் தாம் பிரதிநிதித்துவம் செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (26) நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலில் ஜனாதிபதி அலி பொங்கோ ஒன்டிம்பா வெற்றியீட்டியதாக அரச தேர்தல் குழு கூறிய நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொங்கோவின் குடும்பம் கடந்த 53 ஆண்டுகளாக கபோனில் ஆட்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கபோன் மக்களின் பெயரால், தற்போதைய அரசை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் அமைதியை பாதுகாக்க நாம் தீர்மானித்துள்ளோம்” என்று இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து தலைநகர் லைப்ரவில்லேவில் துப்பாக்கி சத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்ததாக ரோய்ட்டர்ஸ் மற்றும் ஏ.எப்.பி செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும் இது தொடர்பில் அரசிடம் இருந்து உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

64 வயதான பொங்கோ தனது தந்தை இறந்த பின் 2009 ஆம் ஆண்டு ஜனாதிபதியானதோடு 2018 இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தனது பணியில் இருந்து ஓர் ஆண்டு காலம் விலகி இருந்தார். அப்போது அவரை பதவி விலகக் கோரும் குரல் வலுத்திருந்தது. 

2019 இல் பொங்கோவை பதவி கவிழ்க்கும் இராணுவ சதிப்புரட்சி ஒன்று தோல்வி அடைந்தது. அந்த சதிப்புரட்சியில் ஈடுபட்ட இராணுவத்தினர் சிறை வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment