(இராஜதுரை ஹஷான்)
முடிந்தால் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுங்கள். மக்கள் விடுதலை முன்னணி தொடர்பில் பல விடயங்களை நீதிமன்றத்தில் பகிரங்கப்படுத்துவோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்தார்.
கொழும்பில் உள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட தொகுதி அமைப்பாளர் கூட்டம் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை முன்னிலைப்படுத்தி தனது பெயருக்கு கலங்கம் விழைவித்ததாக குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 10 பில்லியன் ரூபா கோரி கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
எனக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வழக்குத் தாக்கல் செய்யலாம். மக்கள் விடுதலை முன்னணி தொடர்பில் நீதிமன்றத்தில் பல விடயங்களை நாங்களும் வெளிப்படுத்துவோம்.
நாட்டுக்கு சேவையாற்றிய ராஜபக்ஷர்களை 'திருடர்கள்' என மக்கள் விடுதலை முன்னணியினர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அனுரகுமார திஸாநாயக்க விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது 1000 குளங்களை அபிவிருத்தி செய்வதாக குறிப்பிட்டு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
அதற்கு திறைசேரி ஊடாக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் குளங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. ஆகவே அந்த நிதிக்கு என்ன நேர்ந்தது என்பதை மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
ராஜபக்ஷர்கள் மீது சேறு பூசி அதனூடாக ஆட்சியை கைப்பற்றுவது மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அரசியல் கொள்கையாக காணப்படுகிறது. நாட்டு மக்கள் ஒருபோதும் மக்கள் விடுதலை முன்னணியினரிடம் ஆட்சியை ஒப்படைக்கமாட்டார்கள். ஜே.வி.பி.யினர் இந்த நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவை சிரேஷ்ட பிரஜைகள் மறக்கவில்லை என்றார்.
No comments:
Post a Comment