கௌரவ பட்டங்களை வழங்குவதற்கான அதிகாரம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும், ஜனாதிபதிக்கும் மட்டுமே உள்ளது. அவ்வாறு, வேறு நிறுவனங்கள், அமைப்புக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வாறான விருதுகள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில், பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கெளரவ பட்டங்களையும் பெயர்களையும் வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் ஜனாதிபதிக்கு மாத்திரமே சட்ட ரீதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வேறு நிறுவனங்கள் இவ்வாறான விருதுகளை வழங்குவதற்கு எந்த சட்ட ஏற்பாடுகளும் கிடையாது என்பதையும் கல்வியமைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் புத்திக்க பத்திரண எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.
புத்திக்க பத்திரண எம்.பி, குறிப்பிடுகையில், பேராசிரியர், டாக்டர், கலாநிதி, வித்தியாஜோதி, வித்தியா கீர்த்தி, தேசபந்து, தேசகீர்த்தி, தேசமான்ய, விஷ்வகீர்த்தி மற்றும் தேசசக்தி போன்ற கெளரவ நாமங்கள் கெளரவ பட்டங்களை, பதவிகளை அளிப்பதற்கு அதிகாரம் கொண்டுள்ள அரச நிறுவனங்கள் யாவை என என கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்,
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கெளரவ நாமங்கள், கெளரவ பட்டங்கள் மற்றும் பதவிகளை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் ஜனாதிபதியினால் மாத்திரமே சட்ட ரீதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் ஒன்று இவ்வாறான பட்டங்கள் மற்றும் பதவிகளை வழங்குவதானால் அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிகள் அடங்கிய சுற்றுநிருபம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதியினால் நாட்டின் பிரஜைகளுக்கு இவ்வாறான விருதுகளை வழங்க முடியும். அது தொடர்பிலும் சட்டம் காணப்படுகிறது.
அவ்வாறு விருது வழங்குவதானால், அதற்காக பகிரங்க விண்ணப்பம் கோரி, அதனை நிபுணர்கள் குழு பரீட்சித்துப் பார்த்து அனுமதிக்கப்பட வேண்டும். இந்த இரண்டு முறைகள் அன்றி வேறு எந்த நிறுவனங்களுக்கும் இவ்வாறு விருது வழங்குவதற்கு சட்டத்தில் இடம் கிடையாது.
சில நிறுவனங்கள் முன்னெடுக்கும் இத்தகைய செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்போது எழுந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாறு கெளரவ பட்டங்கள் வழங்கப்படுவது சட்ட விராேதமாகும். கெளரவ பதவிகளை ஜனாதிபதிக்கு மாத்திரமே வழங்க முடியும். ஆனால் இன்று 15, 20 ஆயிரம் என பணம் வழங்கி அவர்களுக்கு தேவையான கெளரவ பட்டங்களை வழங்க நாடு பூராகவும் பல நிறுவனங்கள் இருக்கின்றன. தேசத்துராேகிகளும் இவ்வாறு பணம் வழங்கி தேசபிமானி என பட்டம் பெற்றுக் கொண்டு செயற்படுகி்ன்றனர். அதனால் இதனை நிறுத்த வேண்டும். பாரிய தொழிலாக இது தற்போது நாட்டில் இடம்பெறுகிறது என்றார்.
இதற்கு அமைச்சர் சுசில் பதிலளிக்கையில், எதிர்காலத்தில் இவ்வாறான விருது வழங்குவதை தடுக்கும் வகையில் பாராளுமன்றத்துக்கு சட்டமூலம் ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment