(எம்.மனோசித்ரா)
சீனா ஆராய்ச்சிக் கப்பலின் வருகை தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும் உரிய தீர்மானங்களை எடுக்கும். இதுபோன்ற பிராந்தியம் சார் விடயங்களில் இலங்கை அரசாங்கம் அணிசேரா கொள்கையின் அடிப்படையிலேயே செயற்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற போது இவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சீன ஆராய்ச்சி கப்பலின் வருகை தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் தீர்மானங்களை எடுக்கும்.
எவ்வாறிருப்பினும் அணிசேரா கொள்கையின் அடிப்படையில் பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயற்படும்போது எந்தவொரு தரப்புக்கும் அச்சுறுத்தல்களோ பாதிப்புக்களோ ஏற்படும் வகையில் இலங்கை செயற்படாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அயல் நட்பு நாடுகளுடன் சமூகமான நட்புறவுடன் செயற்படும் கொள்கையின் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. இது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு விரைவில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தல்களை வழங்கும் .
எவ்வாறிருப்பினும் சீனக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளதாகவும், அனுமதி வழங்குவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அத்தோடு அனுமதியை வழங்க வேண்டாமென இந்தியா வலியுறுத்தி வருவதாகவும், இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டே இந்திய பாதுகாப்பு அமைச்சர் கொழும்பு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment