ஊடகங்களில் தோன்றும் ஆசைக்காக மக்கள் பணத்தை வீண்விரயமாக்கும் எதிர்க்கட்சித் தலைவர் - ஜனாதிபதியிடம் விசனம் வெளியிட்ட ஆளும் கட்சி - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 30, 2023

ஊடகங்களில் தோன்றும் ஆசைக்காக மக்கள் பணத்தை வீண்விரயமாக்கும் எதிர்க்கட்சித் தலைவர் - ஜனாதிபதியிடம் விசனம் வெளியிட்ட ஆளும் கட்சி

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடகங்களில் தோன்ற வேண்டும் என்ற தனது ஆசைக்காக பாராளுமன்ற அமர்வுகளின்போது நாளொன்றுக்கு 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை வீணாக அழித்து வருவதாக ஆளும் கட்சியின் பின் வரிசை எம்.பிக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் தமக்கு பாராளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புக்களை இழக்க நேரிடுவதாகவும் அவர்கள் ஜனாதிபதியின் கவனத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது குழுவினர் பாராளுமன்றத்தில் வாய் மொழி மூல கேள்வி பதிலுக்காக, ஒதுக்கப்படும் ஒரு மணித்தியாலத்தை சரியாகப் பயன்படுத்தாமல் மக்களின் பணத்தை வீணடிக்கும் வகையில் செயற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தலையிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஆளும் கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேம்நாம் சி தொலவத்த, மதுர விதானகே, ஜகத் சமரவிக்கிரம உள்ளிட்டோரும், ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆஷூ மாரசிங்கவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர், பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய் மொழி மூல கேள்விகளை எழுப்பும்போது அநாவசியமான கருத்துக்களை முன்வைத்து, இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒரு மணித்தியாலத்தை வீணடிப்பதால் மக்களுக்காக சபையில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிட்டுள்ள சட்டமூலங்கள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வதாக அவர்கள் இதன்போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு காலை நேரத்தை முகாமைத்துவம் செய்ய முடியாமையினால் மாலையாகும்போது பின் வரிசை உறுப்பினர்களுக்கு விவாதங்களின்போது கருத்துக்களை தெரிவிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதனால் தமக்கு விவாதங்களில் பங்குபற்றக் கூடிய சந்தர்ப்பங்களை இழக்க நேரிடுகின்றமையானது அநீதியாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்காக நாளொன்றுக்கு 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிக செலவு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகங்களில் தோன்ற வேண்டும் என்ற ஆசைக்காக வீணடிக்கப்படுவதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் விசனம் வெளியிட்டனர்.

எனவே இந்த விடயம் தொடர்பில் தலையிடுமாறு எம்.பிக்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment