ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வரை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில்லை - கத்தோலிக்க திருச்சபை - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 30, 2023

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வரை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில்லை - கத்தோலிக்க திருச்சபை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை அரசாங்கத்தின் எந்த தரப்பினருடனும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயாரில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு கத்தோலிக்க திருச்சபை எவ்வளவு தூரம் ஆர்வமாக உள்ளது என்பது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலெஸ் சில நாட்களிற்கு முன்னர் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையிலேயே கத்தோலிக்க திருச்சபை தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

சிஐடியினருடன் இணைந்து விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை திருச்சபை சாதகமாக பரிசீலிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அருட்தந்தை ஜூட் கிறிசாந்த பெர்ணாண்டோ, டிரான் அலெஸ் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிப்பதை மாத்திரம் செய்கின்றார். செய்ய வேண்டியதை செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சில தரப்புகள் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்துவதில் மாத்திரம் ஆர்வமாக உள்ளன. உண்மையை கண்டறிவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார், ஆனால் அவர்தான் அவ்வாறு செயற்படுகின்றார் என ஜூட் கிறிசாந்த பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் உட்பட பலருக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது. அரசாங்கம் எந்த பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தவில்லை என தெரிவித்த அருட்தந்தை, அமைச்சர் டிரான் அலெஸ் அதனை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment