ஆட்பதிவுத் திணைக்களத்தால் விநியோகிக்கப்பட்ட ஒரு தொகுதி தேசிய அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், ஒருவர் கைதானார்.
ஹற்றன் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை (05) இவரை கைது செய்தனர்.
ஹற்றன் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேச வாசிகளின் தேசிய அடையாள அட்டைகளையே இவர், தம்வசம் வைத்திருந்துள்ளார்.
ஹற்றன் வில்பிரட்புர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதான நபரே, இது தொடர்பில் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர், தேசிய அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ், வங்கி அட்டைகளை ஆகியவற்றை பிணையாக வைத்துக் கொண்டு அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் வர்த்தகத்தில் ஈடுபடுபவரென விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், பணம் பெற்றுக் கொண்டவர்களின் பெருவிரல் அடையாளம் வைக்கப்பட்டுள்ள வெற்றுக் கடதாசிகள் சிலவும் மற்றும் கையொப்பம் இடப்பட்டுள்ள கடதாசிகள் உள்ளிட்ட ஆவணங்கள் சிலவும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
தேசிய அடையாள அட்டை காணாமல் போவது தொடர்பில் ஹற்றன் பொலிஸ் நிலையத்துக்கு நாளாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளது. இதையடுத்து, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணைகளிலே, இந்த வர்த்தகம் அம்பலமானது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சந்தேக நபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போதே, ஒரு தொகை தேசிய அடையாள அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
No comments:
Post a Comment