உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றுக்குப் பின் சீனாவின் 'எயா சைனா' (Air China) விமான நிறுவனம் இலங்கையுடன் மீண்டும் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
சீன தேசிய விமான சேவையின் CCA-425 என்ற விமானம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நேற்றையதினம் (03) இரவு 08.20 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த விமானத்தில் 142 பயணிகளும், 9 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர்.
இதனது கன்னி விமானத்திற்கு ஏ-320 ஏர்பஸ் வகை விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீன தேசிய விமான சேவையின் விமானங்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன், வெள்ளி போன்ற நாட்களில் இரவு 08.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து அதே விமானங்கள் அன்றையதினம் இரவு 10.15 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்டு சீனாவின் செங்டு சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைகின்றன.
சீன தேசிய விமான நிறுவனம் சுமார் 3 வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கான விமான சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.
நேற்றிரவு வந்தடைந்த முதலாவது விமானத்தை வரவேற்க இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhen Hong, சீன தேசிய விமான சேவையின் பிராந்திய முகாமையாளர் Xue Jun உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment