அக்கரைப்பற்று பிரதேசத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலான கட்டணத்திற்கு இரத்த மாதிரி பரிசோதனை அறிக்கையை வழங்கிய மருத்துவ ஆய்வு கூட உரிமையாளருக்கு, இன்று (13) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலான கட்டணத்திற்கு இரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை வழங்கி வருவதாக பொதுமக்களால் நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின்போது கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கு விசாரணை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
இரத்த மாதிரி பரிசோதனை அறிக்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட 1200 ரூபாவை விட கூடுதலாக 1300 ரூபாவிற்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒலுவில் விசேட நிருபர்
No comments:
Post a Comment