பந்துல யாழ்ப்பாணம் வந்தடைந்த புகையிரதத்தை வரவேற்றார் டக்ளஸ் : புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான பாதை திறந்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 13, 2023

பந்துல யாழ்ப்பாணம் வந்தடைந்த புகையிரதத்தை வரவேற்றார் டக்ளஸ் : புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான பாதை திறந்து வைப்பு

அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கப்பட்ட புகையிரத பாதை உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் போக்குவரத்திற்காக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (13) இடம்பெற்றது.

கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான புகையிரதப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில், புகையிரதம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணரத்னவை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் புகையிரத நிலையத்தில் வரவேற்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த போக்குவரத்துதுறை அமைச்சர், இந்திய அரசாங்கத்தின் சுமார் 3000 கோடி ரூபாய் நிதிப் பங்களிப்புடன் வடக்கிற்கான புகையிரதப் பாதை புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும், எதிர்வரும் ஜனவரி மாதத்தின் பின்னர் கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான போக்குவரத்து நேரம் ஒரு மணித்தியாலம் குறைவடையும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஓமந்தை தொடக்கம் மகோ வரையிலான புகையிரதப் பாதையை புனரமைப்பதற்கான கடந்த 6 மாதங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்று புகையிரதம் ஊடாக யாழ்ப்பாணம் வருகை தந்த போக்குவரத்து அமைச்சர், புகையிரத தண்டவாளங்களை புனரமைப்பதற்காக உழைத்த அனைத்து தரப்பினருக்கும் பராட்டுக்களை தெரிவித்ததுடன் இந்திய அரசாங்கத்திற்கு நன்றியையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அநுராதபுரம் - ஓமந்தைக்கு இடையிலான தொடருந்து மார்க்கம் நாளைமறுதினம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

குறித்த தொடருந்து மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் முதல் மூடப்பட்டிருந்தது.
மஹவையில் இருந்து ஓமந்தை வரையில் 128 கிலோ மீற்றர் தூரம் உள்ள நிலையில், இந்திய நிதியுதவியின் கீழ் அதன் திருத்தப் பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

97.27 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் குறித்த தொடருந்து மார்க்கத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டது.

புதிய பாதையின் ஊடாக தொடருந்துகள் 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும் என்பதுடன், முதல் சில நாட்களுக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, அநுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையில் 45 நிமிடங்களில், கொழும்பு கோட்டையில் இருந்து ஓமந்தைக்கு 5 மணித்தியாலயங்களிலும் பயணிக்க முடியும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பாதை திறக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கு பல தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான மார்க்கத்தின் திருத்தப்பணிகள் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கான நேரடி தொடருந்து சேவை இடைநிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment