சுகாதார நெருக்கடி தொடர்பில் அவசர நிலையை பிரகடனம் செய்யுமாறு வைத்தியர் ருக்சான் பெலான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருந்துகள் தொடர்பிலான பாதிப்புகளால் அதிகளவானவர்கள் உயிரிழப்பதன் காரணமாக தேசிய அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் கடனுதவியுடன் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பில் சந்தேகம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள வைத்தியர் ருக்சான் பெலான, இந்த விவகாரத்தை எவ்வாறு கையாள வேண்டும் என அமைச்சரவை ஆராய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுகாதாரதுறையைச் சேர்ந்த ஏனைய அமைப்புகளுடன் இணைந்து இந்திய தூதரகத்தின் ஊடாக இந்தியாவிற்கு கடிதமொன்றை அனுப்ப எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பணத்தில் மீள செலுத்தப்பட வேண்டிய கடனை வீணடித்துள்ளனர். இது குற்றம் எனவும் தெரிவித்துள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலான, சில அதிகாரிகள் கடனுதவியை துஸ்பிரயோகம் செய்யலாம் என நினைத்துள்ளனர். தாங்கள் ஆடம்பரவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதே அவர்களின் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டுப் போர் காலத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலால் நிலவிய சூழல் போன்ற சுகாதார சூழல் தற்போது காணப்படுகின்றது. இது ஒரு அவசர நிலை நாடு முழுவதும் புதைக்கப்பட்டுள்ள குண்டுகள் எந்நேரமும் வெடிக்கலாம் என்பது போன்ற நிலை தற்போது காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர், இந்த விடயத்தை அரசாங்கம் மிகவும் சாதாரணமாக கருதுகின்றது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment