முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், மேலதிகமாக தொடர்ந்தும் மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குருந்தூர் மலைக்கு 04.07.2023 இன்றையதினம் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
அத்தோடு குறித்த கள விஜயத்தினைத் தொடர்ந்து பொலிசார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் ஆகியோரது பதில் அறிக்கைக்காக குறித்த வழக்கானது எதிர்வரும் 08.08.2023ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குருந்தூர்மலை தொடர்பாக வழக்கிலக்கம் AR/673/18 இல் தொடரப்பட்டுள்ள வழக்கில், 12.06.2022 இற்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்குமேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதிமன்றம் 19.07.2022 அன்று கட்டளை பிறப்பித்திருந்தது.
எனினும், நீதிமன்றம் இவ்வாறு கட்டளை வழங்கிய பிற்பாடும், நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர் மலையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 23.02.2023 அன்று குருந்தூர் மலைக்கு, தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரும் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த விஜயத்தின்போது இவ்வாறு நீதிமன்றத்தின் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வாறு நீதிமன்றக் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுவது தொடர்பில் கள விஜயத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடந்த 23.02.2023 அன்றையதினமே முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டது.
அதேவேளை அதனைத் தொடர்ந்து 02.03.2023 அன்று முல்லைத்தீவு நீதிமன்றில் AR/673/18 என்னும் வழக்கிலக்கத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டு கட்டுமானப் பணிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் அவ்வாறு குருந்தூர் மலையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்கு 04.07.2023 இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த கள விஜயத்தின்போது குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற மேம்படுத்தல் லேலைகள் தொடர்பில் நீதிபதியால் ஆராயப்பட்டுள்ளது.
அதேவேளை பொலிசார் மற்றும் தொல்லியல் திணைக்களம் இது தொடர்பிலான பதில் அறிக்கை ஒன்றினை வழங்குவதற்காக எதிர்வரும் 08.08.2023ஆம் திகதிக்கு குறித்த வழக்கினை நீதிபதி திகதியிட்டுள்ளது.
மேலும் நீதிபதி இவ்வாறு குருந்தூர் மலைக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தபோது, அங்கு பாாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், தண்ணிமுனிப்பு மக்கள், குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்களும் அங்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment