(எம்.வை.எம்.சியாம்)
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய சில மாணவர்களின் வன்முறையான செயற்பாடுகள் சமூகத்தில் நிலவும் வன்முறைகளின் தன்மையை வெளிப்படுத்துவதாக உளவியல் தொடர்பான வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் பாடசாலைகளின் வளங்களுக்கும், அரச சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்திருந்த பல சம்பவங்களும், மோதல்களில் ஈடுபட்டிருந்ததான செய்திகளும் அதிகளவில் பதிவாகியிருந்தன.
திம்புலாகல, மகுல்தமன மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் குழுவொன்று வகுப்பறைகளின் மின் விசிறிகள் மற்றும் மலசலகூட கதவுகளை சேதமாக்கியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் மன்னம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலையொன்றின் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் குழுவொன்று சக மாணவர் ஒருவரை பொல்லால் தாக்கியுள்ளதோடு, காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்ட 6 மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், கண்டி, தென்பிடிகம பகுதியில் பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை அவரது நண்பர் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவங்கள் தொடர்பில் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் உளவியல் தொடர்பான வைத்தியர் ரூமி ரூபன் கருத்து தெரிவிக்கையில், அண்மைக்காலமாக பதிவாகும் இவ்வாறான கட்டுப்பாடற்ற வன்முறைச் சம்பவங்கள் சமூகத்தில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்துகிறது. இது சமூகத்துக்கு பாரியதொரு அச்சுறுத்தலாக மாறுகிறது.
சமூகத்தில் நிலவும் வன்முறைகளின் வெளிப்பாட்டையே மாணவர்களின் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. இதேவேளை, குறித்த மாணவர்கள் பரீட்சை நிறைவடைந்த பின்னர் கிடைக்கப் பெறும் மகிழ்ச்சி, சுதந்திரத்தை வன்முறை வடிவில் வெளிப்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment