பாறுக் ஷிஹான்
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் மிலேட்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்குமுகமாக நிகழ்வொன்று இன்று (11) அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் முன்பாக நினைவுத் தூபியில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தமயந்த விஜயசிறி, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்க உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸார், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990ம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர் நீத்த மற்றும் கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின் குடும்பங்களிலுள்ள சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
இது தவிர, நிகழ்வின் ஆரம்பத்தில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தமயந்த விஜய சிறியினால் பொலிஸ் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டதுடன், உயிர் நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மௌன பிரார்த்தனையும் செலுத்தப்பட்டது.
1990ம் ஆண்டு ஜூலை மாதம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்ட விடுதலைப் புலிகள் சகல சிங்கள, முஸ்லிம் பொலிஸார்களையும் ஆயுதங்களையும் அள்ளிச் சென்றார்கள்.
அதன் பின்பு திருக்கோவில் பகுதியிலுள்ள ரூபஸ்குளம் காட்டுப்பகுதியில் சகல பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.
No comments:
Post a Comment