பொது மன்னிப்பு முறைகேடு தொடர்பில் CID யில் முறைப்பாடு : பட்டியலில் இல்லாத நிதி முறைகேடு ஆசாமியும் விடுவிப்பு : விசாரணை நடத்தப்பட்டு அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, June 8, 2025

பொது மன்னிப்பு முறைகேடு தொடர்பில் CID யில் முறைப்பாடு : பட்டியலில் இல்லாத நிதி முறைகேடு ஆசாமியும் விடுவிப்பு : விசாரணை நடத்தப்பட்டு அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அத்துல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் கவனமெடுத்தள்ளது.

அரசியலமைப்பின் 34 (1) பிரிவின் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.

எவ்வாறாயினும், மேற்குறித்த சம்பவத்திற்கு அமைவாக 2025-05-06 திகதியிடப்பட்ட மற்றும் (06/01 යෝජිත/ ජ.පො.සමා/ 05-12/2025) இலக்கத்தில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர் பட்டியலில் 388 கைதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாக சிறைத் தண்டனை வழங்கப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அதாவது, ஜனாதிபதியால் பொது மன்னிப்புக்காக அனுமதிக்கப்பட்ட 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் கடந்த வெள்ளிக்கிழமை (06) “ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக” எனும் தலைப்பின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) முறைப்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பான அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டபிள்யூ.எச். அத்துல திலகரத்ன எனும் குறித்த நபர் ரூ. 40 இலட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் மேல் நீதிமன்றினால் அண்மையில் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டவராவார்.

நிதி நிறுவனமொன்றின் அநுராதபுரம் கிளையின் முன்னாள் முகாமையாளராக பணியாற்றிய குறித்த நபரிடம் 2014 பெப்ரவரி 17 – ஜூன் 09 கால பகுதியில் பங்குச் சந்தையில் இலாபம் பெற்றுத்தருமாறு நபர் ஒருவரால் வழங்கப்பட்ட ரூ. 40 இலட்சம் பணத்தை ஏமாற்றிய சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர் குற்றவாளியாக நிரூபணமாகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு கடந்த மே 02ஆம் திகதி அநுராதபுரம் மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது வடமத்திய மாகாணத்திற்கான மேல் நீதிமன்ற நீதவான் லக்மாலி ஹேவாவசம் குற்றவாளியான சந்தேகநபருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு (5 வருடங்களுக்கு இவ்வாறான குற்றங்களை புரிந்தால் 2 வருட கடூழிய சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடும்), ரூ. 20 இலட்சம் அபராதத்தை உரிய தரப்பிற்கு செலுத்துமாறு தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

அத்துடன் குறித்த அபராத தொகையை செலுத்தாவிட்டால் 6 மாத கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த அபராத தொகையை செலுத்துவது தொடர்பான வழக்கு ஜூன் 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதற்கமைய குறித்த வழக்கு கடந்த புதன்கிழமை (04) அநுராதபுரம் மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த குற்றவாளி மே 12ஆம் திகதி ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாக அநுராதபுரம் சிறை அதிகாரிகள் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபருக்கு எதிரான குறித்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

ஆயினும் சந்தேகநபருக்கு எதிராக அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் மாத்திரம் 20 இற்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அநுராதபுரம் மேல் நீதிமன்றிலும் சில வழக்குகள் காணப்படுவதாகவும் அவை அனைத்தும் நிதி மோசடி தொடர்பான வழக்கு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வழக்கின் முறைப்பாட்டாளர்களில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் முன்னாள் சட்ட வைத்தியர்கள் 2 பேர் உள்ளிட்ட மேலும் சில வைத்தியர்கள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் காணப்படுகின்றனர்

அத்துடன் அத்துல திலகரத்ன எனும் குறித்த நபர், நிதி மோசடி தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு சிறை சென்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment