சுரங்கப் பணியகத்தின் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், மணல் அகழ்வுகளில் மாபியாக்ளுக்கு இடமளிக்க முடியாது. மண் அகழ்வு அனுமதிப்பத்திரம் வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
எமது அமைச்சின் கீழ்வரும் கனிய வளம் மற்றும் அதனுடான உற்பத்திகள் தொடர்பில் வெளிநாட்டு கனியவள நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இவற்றின் ஏற்றுமதி மூலம் எமது நாட்டுக்கு பெருமளவு வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.
அதேபோன்று மண்ணகழ்வு உள்ளிட்ட செயற்பாடுகளில் காணப்பட்ட மோசடிகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணல் போக்குவரத்து செய்வதற்கான தூரம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கான அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி ஊழல் மோசடிகள் இடம் பெறுகின்றன அவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. எக்காரணமுமின்றி விசேட விதமாக அது வழங்கப்பட்டிருந்தது. அதனை கவனத்திற் கொண்டு நாம் அந்த எண்ணிக்கையை 60 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment