மக்களிடம் உண்மையை கூறாமல் தன்னிச்சையாக செயற்பட அரசாங்கம் முயற்சி : மத்திய வங்கி ஆளுநரின் கருத்து முரண்பாடானது என்கிறார் நாலக கொடஹேவா - News View

About Us

About Us

Breaking

Thursday, June 29, 2023

மக்களிடம் உண்மையை கூறாமல் தன்னிச்சையாக செயற்பட அரசாங்கம் முயற்சி : மத்திய வங்கி ஆளுநரின் கருத்து முரண்பாடானது என்கிறார் நாலக கொடஹேவா

(இராஜதுரை ஹஷான்)

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்களிடம் உண்மையை குறிப்பிடாமல் தன்னிச்சையாக செயற்பட அரசாங்கம் முயற்சிக்கிறது. தேசிய கடன்களை மறுசீரமைத்தால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் விசேட அமைச்சரவை கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மக்களிடம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என குறிப்பிடுகிறார் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்களின் கருத்துக்களுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நித்திரையில் இருந்து எழுந்ததைபோல் பாராளுமன்றத்தை கூட்டி தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உலகில் எந்த நாடும் இயற்றிக் கொள்ளவில்லை. இலங்கையை போன்று பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ள பாக்கிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டுள்ளது. இருப்பினும் தேசிய கடன்களை மறுசீரமைக்கவில்லை.

தேசிய கடன்களை மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதிக்கவில்லை. கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சிறந்த தீர்மானத்தை முன்வையுங்கள் என்ற ஆலோசனையை மாத்திரம் நாணய நிதியம் முன்வைத்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்திடமிருந்து அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள கடன்களை நீண்ட கால கடனாக மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் நிதிய வைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். சாதாரண தொழில் துறை முதலீட்டாளர்கள்கூட நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் தேசிய கடன்கள் மறுசீரமைக்கப்படும்போது வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மக்கள் மத்தியில் வங்கி கட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என குறிப்பிடுகிறார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சி ஜனாதிபதிக்கு சார்பாக செயற்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment