(இராஜதுரை ஹஷான்)
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்துக்கு அமைய இம்முறை பேருந்து கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியமற்றது. நடைமுறை கட்டண திட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்பதை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வருடாந்த பேருந்து கட்டண திருத்த கொள்கைக்கு அமைய பேருந்து கட்டணத்தை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 12 பிரதான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பேருந்து கட்டணம் திருத்தம் செய்யப்படவுள்ளது.
கொவிட் பெருந்தொற்று காலத்தில் 20 சதவீதத்தால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து எரிபொருள் விலை குறைப்புக்கு ஏற்ப பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது. பேருந்து கட்டணத்தை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சு முன்வைத்த கோரிக்கைக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளோம்.
பேருந்து உதிரிப்பாகங்களின் விலையை குறைக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். இருப்பினும் பல்வேறு காரணிகளால் உதிரிபாகங்களின் விலை குறைக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் பேருந்து கட்டணத்தை குறைத்தால் தனியார் பேருந்து சேவை தொழிற்றுறையினர் பாதிக்கப்படுவார்கள்.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்துக்கு அமைய இம்முறை பேருந்து கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியமற்றது என்பதை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment