நூருல் ஹுதா உமர்
சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்ற பிரதேசமான பொத்துவில், அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர்ச்சறுக்கல் படகுகளை (surfing board) ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
அறுகம்பை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் இன்று புதன்கிழமை (28) காலை அறுகம்பை பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்டது. பதாதைகளை ஏந்திய போராட்டக்காரர்கள் நிரம்பியிருந்த இப்பேரணி பொத்துவில் பிரதேச செயலகம் வரை சென்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவிக்கையில், மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை வியாபார நடவடிக்கைக்காக சுற்றுலாப் பயணிகளின் நீர்ச்சறுக்கல் படகுகளை (surfing board) சைக்கிள்களில் ஏற்றிச் செல்வதற்காக வாடகைக்கு விடுகின்றனர். இதனால் சுற்றுலாத்துறையை மாத்திரம் நம்பி தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வரும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கவலையோடு கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
தமக்குள்ள இப்பிரச்சினைகளை போக்குவரத்து பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தாம் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தவர்கள், மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருக்கும் நீர்ச்சறுக்குப் படகுகளை (surf board) அகற்றி, வீதி விபத்துக்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளையும் மக்களையும் பாதுகாத்து, தமது வாழ்வாதாரத்தையும் சிக்கலின்றி முன்கொண்டு செல்வதற்கு பொலிஸார் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கோரும் வகையிலான மகஜர் ஒன்றை இதன்போது பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸிடம் பேரணியினர் கையளித்தனர்.
No comments:
Post a Comment