(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அரச தலைவரான கோட்டபய ராஜபக்ஷ தவறிழைத்தாரே தவிர பொதுஜன பெரமுன தவறிமைக்கவில்லை. வெகுவிரைவில் தேர்தல் ஒன்று இடம்பெறும். ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அளுத்கம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அடிமட்ட மக்கள் ஆதரவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2016 ஆம் ஆண்டு உதயமானது. நல்லாட்சி அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என தொடர்ந்து மக்களாணையை உறுதிப்படுத்தினோம்.
30 வருட கால பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த ராஜபக்ஷர்களை பெரும்பாலான மக்கள் ஒருபோதும் புறக்கணிக்கமாட்டார்கள். ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்களே தவிர நாட்டுக்கு தீ வைக்கவில்லை.
கொவிட் பெருந்தொற்றின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார பாதிப்பு அரசியல் நெருக்கடியாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்கு மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்தை வைத்து அரசியலுக்கு வந்த தரப்பினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதிக்கு பின்னர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உட்பட ராஜபக்ஷர்கள் அரசியலில் இருந்து விலகி விடுவார்கள் என நாட்டுக்கு தீ வைத்த மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் கருதினார்கள்.
பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்புடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளோம்.
வெகுவிரைவில் ஏதாவதொரு தேர்தல் இடம்பெறும் அப்போது எமது பலத்தை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரச தலைவர் கோட்டபய ராஜபக்ஷ அரசியல் ரீதியில் தவறிழைத்தாரே தவிர பொதுஜன பெரமுன தவறிழைக்கவில்லை. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயம் அமைப்போம் என்றார்.
No comments:
Post a Comment