வவுனியாவில் பதிவு செய்யப்படாத ஐந்து மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வே.மகேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழுக் கூட்டம்செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது.
அந்த வகையில் தனியார் மருந்தகங்களில் பதிவு செய்யப்பட்ட மருந்தாளர்கள் இல்லாமல் மருந்துகள் வழங்கப்படுகின்ற விடயம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியாவில் 19 தனியார் மருந்தகங்கள் உள்ளது. அவற்றில் 8 மருந்தகங்கள் பதிவு செய்யப்படவில்லை. அவற்றில் 5 மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளோம். ஏனைய மூன்று மருந்தகங்கள் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை எமக்கு வழங்கியுள்ளனர்.
அத்துடன் இங்கு இரண்டு மொத்த வியாபார மருந்தகங்கள் உள்ள நிலையில், அதில் ஒன்று பதிவு செய்யப்படவில்லை. அதற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை வவுனியா பொது வைத்தியசாலையில் உள்ள மருந்தகங்கள் உரிய நேரத்திற்கு முன்பாகவே மூடப்படுவதாக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆராய்வதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment