(எம்.ஆர்.எம்.வசீம்)
கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லும். அந்த நிலைமையை பாதுகாக்கவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. என்றாலும் நாடு மீண்டும் வரி யுகத்துக்கு சென்று அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதை விரும்புபவர்களே பொய் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை குழப்பி வருகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தின் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை குழப்பி வருகின்றனர்.
கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் நாடு அராஜக நிலைக்கு செல்லும் எனவும் வங்கி கட்டடைப்பு வீழ்ச்சியடையும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், வங்கிகளுடன் கலந்துரையாடாமல் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் தெரிவிப்பதுபோல் அரசாங்கம் அவ்வாறு செயற்படவில்லை. செயற்படவும் முடியாது. அதேநேரம் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் கடன் மறுசீரமைப்பு முக்கியமாகும்.
எதிர்க்கட்சிகள் தெரிவிப்பதுபோல் கடன் மறுசீரமைப்பு செய்யாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லும், மக்கள் வீதிக்கிறங்கி போராடும் நிலை ஏற்படும். அந்த நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு குழப்ப நிலையை எதிர்பார்ப்பவர்களே கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்வது தொடர்பாக வங்கிகளுடன் கலந்துரையாடி இருக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடி இருக்கிறது. அதேபோன்று அமைச்சரவையில் இது தொடர்பாக கலந்துரையாட இருக்கிறது. அதன் பின்னர் பாராளுமன்ற அரசாங்க நிதிக் குழுவுடன் கலந்துரையாட இருக்கிறது.
இது தொடர்பாக பாராளுமன்றத்துக்கு தெரிவித்து, பாராளுமன்றத்தில் எதிர்வரும் சனிக்கிழமை விவாதிக்கப்பட இருக்கிறது. அதனால் அரசாங்கம் எதனையும் தன்னிச்சையாக செய்வதி்ல்லை.
அத்துடன் கடன் மறுசீரமைப்பு என்பது கடன் நிவாரணத்தை நீடித்துக் கொள்வது, கடன் வட்டியை குறைத்துக் கொள்வது அல்லது நீக்கிக் கொள்வதாகும்.
நாட்டின் மொத்த கடன் 83.6 பில்லியன் ரூபாவாகும். அதில் தேசிய கடன் 42 பில்லியன் ரூபா. சர்வதேச கடன் 41 பில்லியன் ரூபாவாகும். சர்வதேச கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா இணக்கம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் சர்வதேச கடன் மறுசீரமைப்பு மாத்திரம் செய்து அரசாங்கம் எதிர்பார்க்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. அதனால்தான் தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
அத்துடன் இந்த கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்போவது மத்திய வங்கியும் திறைசேரியுமாகும். அதனால் சாதாரண பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
அத்துடன் திறைசேரியில் வியாபாரிகள் முதலீடுகளை செய்திருக்கின்றனர். அவர்களின் பணத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.
அதனால் எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. நாட்டினதும் மக்களதும் எதிர்காலத்தை கருத்திற் கொண்டே அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
No comments:
Post a Comment