பௌத்த மதம் உட்பட ஏனைய மதங்களுக்கு எதிரான தவறான செயற்பாடுகளை முற்றிலும் நிறுத்துவதற்காகவும், மத சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்கும் புதிய சட்டமொன்றை எதிர்காலத்தில் கொண்டுவரவுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார நடவடிக்கைகள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்று தெரிவித்தார்.
இன்னும் இரண்டு வாரங்களில் அச்சட்டத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அதன் பின்னர் விரைவாக ஏனைய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் கூறிய விக்கிரமநாயக்க, மதங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முற்றிலும் நிறுத்துவதற்கான பொறுப்பை தமது அமைச்சு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பௌத்த மதம் உள்ளிட்ட ஏனைய மதங்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு நபர்கள் திரிபுப்படுத்தப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருவது குறித்து அவரிடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் எதையும் தெரிவிக்க முடியும். டிக்டாக் பல்வேறு விடயங்களை பிரசாரம் செய்கின்றது.
அண்மையில் பெண் ஒருவர் பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் கூறிய கருத்தை அண்மையில் பார்த்தோம். அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் . சிலர் ஊடக சுதந்திரத்தை பயன்படுத்தி பலவிதமான கூற்றுக்களை தெரிவித்து பிரபல்யமாக முயற்சிக்கின்றார்கள்.
போராட்டத்தின் பின்னர் உருவான இவ்வாறான சிலர் உள்ளனர். இவ்வாறான தவறான நடவடிக்கைகளை முற்றிலும் இல்லாதொழிக்க வேண்டும். தற்போது வேலி கட்டுவதால் பயனில்லை. ஏனென்றால் வேலிக்கு மேல் பாய முடியும். தற்போது காணப்படும் அந்த நிலைமையை இல்லாதொழிப்பதற்காக வேலைத்திட்டம் ஒன்றை செயல்படுத்தும் பொறுப்பை எனது அமைச்சு ஏற்றுக் கொள்கிறது.
அனைத்து மத மத்திய நிலையங்களும் அந்தந்த மத திணைக்களத்தின் கீழ் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். தற்போது எமது சமூகத்தில் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. அந்நிலைமையே இல்லாதொழிப்பதற்காக நாம் புதிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பொறுப்பையும் எமது அமைச்சின் மூலம் மேற்கொள்வோம்.
அதற்காக ஏனைய அமைச்சுகள், திணைக்களங்கள், மத மத்திய நிலையங்கள், அறநெறி பாடசாலைகள், மக்கள் அமைப்புகள் என்பவற்றை பயன்படுத்தவுள்ளதாகவும் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடும் சம்பவங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த பௌத்த மத மற்றும் கலாசார நடவடிக்கைகள் அமைப்பின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன கூறியதாவது,
மதங்களை நிந்திப்பதை தடுப்பதற்காக அனைத்து மத தலைவர்களும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. திரிபுப்படுத்தப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பது பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறிய செயலாளர் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க அமைச்சு தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment