(எம்.ஆர்.எம்.வசீம்)
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. பரீட்சைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் 6 மாதங்களுக்கு பின்னர் திங்கட்கிழமை (29) ஆரம்பமாகிறது.
ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பரீட்சையில் 4,72,553 மாணவர்கள் தோற்றவுள்ளனர். பாடசாலை மூலம் 3,94,450 பேர் தோற்றவுள்ளனர்.
இதற்காக நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பாதுகாப்பு
ஆரம்பமாக இருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மத்திய நிலையங்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படும்.
அதேபோன்று அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுக்க முடியுமான வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரீட்சை மத்திய நிலையங்களில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
போக்குவரத்து
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் உரிய நேரத்துக்கு பரீட்சை மத்திய நிலையங்களுக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்காக ஈடுபடுத்தப்படும் சிசு செரிய பஸ் சேவை, பரீட்சை முடியும்வரை தொடர்ந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்திருக்கிறார்.
பரீட்சைக்கு தோற்றும் சிறைக் கைதிகள்
இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறைச்சாலைகளில் தங்கி இருக்கும் கைதிகள் 10 பேர் பரீட்சைக்குத் தோற்ற இருக்கின்றனர். அவர்களுக்கான பரீட்சை மத்திய நிலையங்கள் வெலிகடை மற்றும் வட்டரக்க சிறைச்சாலைகளில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் ஒருவர் ஆயுட்கால தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டவர் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
டெங்கு ஒழிப்பு திட்டம்
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற உடலை மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் பரீட்சை மத்திய நிலையங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இன்று 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 8ஆம் திகதி முடிவடைகிறது.
No comments:
Post a Comment