இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு : எச்சரித்துள்ள சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Saturday, April 1, 2023

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு : எச்சரித்துள்ள சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போதுள்ள வடிவத்திலேயே நிறைவேற்றப்பட்டால், அது மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிப்பதற்கும், அச்சட்டம் தவறான முறையில் பிரயோகிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும் என்று சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக பிறிதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கடந்த 22ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டது.

இருப்பினும், அதன் உள்ளடக்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் மோசமாக காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி வரும் நிலையில், இது குறித்து தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இது பற்றி அந்த ஆணைக்குழு மேலும் கூறியிருப்பதாவது, அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போதுள்ள வடிவத்திலேயே நிறைவேற்றப்பட்டால், அது மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிப்பதற்கும், அச்சட்டம் தவறான முறையில் பிரயோகிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும் என்று நாம் கரிசனை கொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக, இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அதன் 4(1)(ஏ) சரத்தின் பிரகாரம், 'கொலைக் குற்றத்துக்கு' தண்டனையாக மரண தண்டனை அறிமுகப்படுத்தப்படும்.

இலங்கையை பொறுத்தமட்டில் கடந்த 1976ஆம் ஆண்டிலிருந்து மரண தண்டனையை நிறைவேற்றுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. எது எவ்வாறெனினும், வாழ்வதற்கான உரிமைக்கு எதிரானதும், மனிதாபிமானமற்ற மிக மோசமான தண்டனையான மரண தண்டனையை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம்.

'பயங்கரவாத செயற்பாடுகளுடன்' எவ்வகையிலும் தொடர்புபடாத போதிலும், ஏதேனுமொரு விதத்தில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனும் விடயத்தை மரண தண்டனையை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தக்கூடாது.

புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இச்சட்டமூலத்தில் சில முன்னேற்றகரமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பினும் கூட, இதில் உள்ள ஏனைய கரிசனைக்குரிய விடயங்கள் நேர்மறையான விடயங்களை வலுவிழக்கச் செய்கின்றன.

அதேபோன்று இப்புதிய சட்டமூலத்தில் 'பயங்கரவாதம்' என்ற சொல்லுக்கு மிகப் பரந்துபட்ட வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனூடாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அடக்கப்படக்கூடும் என்ற கரிசனை தோற்றம் பெற்றுள்ளது.

எனவே, திருத்தங்கள் எவையுமின்றி இச்சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் விளைவாக இடம்பெற்ற மீறல்கள் தொடர்ந்து நிகழ்வதற்கு வாய்ப்பேற்படும்.

எனவே, இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் அதேவேளை, அதனை விடவும் மோசமான சட்டமொன்றின் ஊடாக அச்சட்டத்தை பதிலீடு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இடைநிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment