போலி இணையத்தளத்தை உருவாக்கி அதன் மூலம் விசாக்களை தயார் செய்து விநியோகித்து வந்துள்ள சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி சந்தேகநபர் கொழும்பு பிரதம மஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை ஏப்ரல் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள இந்தியன் விசா நிறுவனத்துடன் இணைந்ததாக கண்டியில் கோபல்லாவ மாவத்தைப் பகுதியில் செயற்பட்டு வரும் நிறுவனத்தின் தகவல்களை பதிவுசெய்து குறித்த இணையத்தளத்தை அந்த சந்தேக நபர் தயாரித்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன் மூலம் போலி மற்றும் மோசடியான வகையில் நீண்ட காலமாக பல நபர்களிடம் விசா பெற்றுத்தருவதாக கூறி பெருமளவு நிதியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அந்த நபரை கடந்த 28 ஆம் திகதி வத்தேகம பிரதேசத்தில் வைத்து மடிக்கணனி மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றுடன் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சந்தேகநபர் பன்விலை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோசடிகளை மேற்கொண்டமை, தன்னை ஒரு உத்தியோகத்தர் போன்று காட்டிக் கொண்டமை, சொத்துக்கள் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றமாகும் என்றும் குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அவரது கணனியின் போலியான இணையத்தளத்தை உருவாக்கியமை குற்றமாகுமென்றும் அவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment