இரவோடு இரவாக ரணிலின் பஸ்ஸில் ஏறிச் சென்றவரே அதாவுல்லாஹ், அவரைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது : எஸ்.எம்.சபீஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 7, 2023

இரவோடு இரவாக ரணிலின் பஸ்ஸில் ஏறிச் சென்றவரே அதாவுல்லாஹ், அவரைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது : எஸ்.எம்.சபீஸ்

பாறுக் ஷிஹான்

தேசிய காங்கிரஸ் தலைவர் எம்மை கிடாக்கள் என்று கூறியதை நான் அறியவில்லை. அதாவுல்லாஹ் (எம்பி) யாருக்கும் தெரியாமல் எல்லோரையும் நட்டாற்றில் விட்டு விட்டு அவர் மட்டும் இரவோடு இரவாக ரணிலுடைய பஸ்ஸில் ஏறிச் சென்றதை காண்கின்றோம். இவ்வேளையிலே மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் ஆன்மா தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரைப் பார்த்து சொல்லும் நீங்கள் செய்த வேலை கிடா அல்ல மடக்கிடா ஒன்று செய்த செயலுக்கு ஒப்பானதாகும் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார்.

நேற்று (06) அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பகுதியில் செய்தியாளர் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்பதில் பாரிய சந்தேகமிருக்கின்றது. அரசாங்கமானது தோல்வியை எதிர்கொள்கின்ற நிலைக்குச் செல்லாது என்பதனால் இத்தேர்தல் நடைபெறாது என்றே நாம் நம்புகின்றோம்.

தேசிய காங்கிரஸ் தலைவர் எம்மை கிடாக்கள் என்று கூறியதை நான் அறியவில்லை. அவருடைய பேட்டிகள், பத்திரிகையாளர் மாநாடுகளை அண்மைக்காலமாக நாங்கள் எவரும் பார்ப்பதில்லை. ஏனெனில், அண்மைக்காலமாக அவரது பேட்டிகள் சுவாரசியமற்றுப் போய் விட்டது. அவற்றைப் பார்ப்பதற்கு நாங்கள் நேரம் ஒதுக்குவது கிடையாது.

கடந்த காலங்களில் அவர் எத்தனை கட்சிகளிலிருந்து மாறினார் என்பது அவருக்குத் தெரியும். முஸ்லீம் காங்கிரஸிலிருந்து விலகி வந்த பின்னர் எத்தனை பேருடன் இணைந்து செயற்பட்டுள்ளார் என்பதை மக்கள் அறிவார்கள்.

உதாரணமாக மஹிந்தவிடமிருந்து மைத்திரியிடம் பின்னர் கோட்டபாய ராஜபக்சவிடம் சென்றார். இப்போது அவர் எங்கிருக்கின்றார் என்பதை சுய பரீசோதனை செய்ய வேண்டும்.

அதேவேளை, கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் மர்ஹூம் அஸ்ரப் ரணிலுடைய பஸ்ஸில் ஏறக்கூடாது என எதிர்வு கூறிச் சென்றிருந்தார் என மேடைகளில் கூறி வந்தவர் அதாவுல்லாஹ் எம்பி. ஆனால், யாருக்கும் தெரியாமல் எல்லோரையும் நட்டாற்றில் விட்டு விட்டு அவர் மட்டும் இரவோடு இரவாக ரணிலுடைய பஸ்ஸில் ஏறிச் சென்றதை காண்கின்றோம்.

இந்த வேளையிலே மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் ஆன்மா தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரைப் பார்த்து நீங்கள் செய்த வேலை கிடா அல்ல மடக்கிடா ஒன்று செய்த செயலுக்கு ஒப்பானதாகும் என பேசிக் கொண்டிருக்கும் என நான் நினைக்கின்றேன்.

கடந்த 15 வருடங்களாக ஒரு தனியாளாக இருந்து கொண்டு ரணிலை எதிர்த்த ஒரு ஆளாகவே பார்த்தோம். அதை நாங்கள் வரவேற்றிருந்தோம். ஆனால், தற்போது ரணிலை சிலாகித்துப் பேசுவதும் அவர்தான் இந்நாட்டின் சிறந்த தலைவர் எனக் கூறுவதும் எப்படியாயின் ஒரு காற்று ஊதப்பட்ட பலூன் ஓட்டை விழுந்து காற்று இறங்கி சுருங்கியதற்கு ஒப்பாக அவரது விம்பம் வெளிப்படுகின்றது.

அண்மைக்காலமாக அவர் நிலை தடுமாறித் திரிகின்றார். அதைப் பார்க்கின்றபோது எமக்கு பரிதாபமாகவே இருக்கின்றது. அவருக்காக நாங்கள் பிரார்த்திக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment