ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌசி பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இன்றையதினம் (09) சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்றத்தில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததை அடுத்து, வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் விருப்பு வாக்கு பட்டியலின் அடிப்படையில் 7 ஆவது இடத்திலுள்ள ஏ.எச்.எம். பெளசி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு கொழும்பு மாவட்டத்தில் 6 பாராளுமன்ற ஆசனங்கள் கிடைத்திருந்ததோடு, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஏ.எச்.எம். பெளசி, மனோ கணேசன் எம்.பிக்கு. அடுத்த படியாக 7 ஆவது இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக, கடந்த ஜனவரி 20 ஆம் திகதி முஜிபுர் ரஹ்மான் தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment