(நா.தனுஜா)
இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்திற்கு முந்தைய தினம் இரவு அமைதிப் போராட்டக்காரர்கள் மீது பொலிஸாரால் நடாத்தப்பட்ட தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் தொடர்புடைய அதிகாரிகள் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் தமது அன்றாட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அவ்வாறிருக்கையில் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், முறையற்ற நிர்வாகம் மற்றும் அடக்குமுறைகள் போன்றவற்றுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியும் கொழும்பு, மருதானையில் அமைந்துள்ள எல்பின்ஸ்ட் அரங்குக்கு முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை சத்தியாக்கிரகப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேளையில் அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நீர்த்தாரைப்பிரயோகம் நடாத்தியதுடன் அவர்களை அங்கிருந்து கலைத்தனர். இதன்போது 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் குறித்து தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்குப் பொதுமக்கள் கொண்டிருக்கும் உரிமைக்கு முற்றிலும் முரணான வகையில் இலங்கை பொலிஸாரால் சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவது இது முதன்முறையல்ல என்றும் மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
'நாம் பார்வையிட்ட காணொளியின் பிரகாரம், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
அதுமாத்திரமன்றி கைது நடவடிக்கையின்போது தடியடிப்பிரயோகம் நடாத்தப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது' என்று குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, கைது செய்யப்பட்டவர்களைப் பார்வையிடுவதற்கு சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் தீவிர கரிசனையைத் தோற்றுவித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
'அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு அதிகாரிகள் மதிப்பளிப்பது அவசியம் என்பதுடன் அதனைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, தொடர்புடைய அதிகாரிகள் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும்' என்றும் மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment