தேர்தலை நடத்த பணம் இல்லை என்றால் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றங்களிடம் உதவி கோரலாம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 8, 2023

தேர்தலை நடத்த பணம் இல்லை என்றால் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றங்களிடம் உதவி கோரலாம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர்

தேர்தலை நடத்துவதற்கு நிதியின்மை காணப்படுமாயின், உள்ளூராட்சி மன்றங்களிடம் இருந்து ஒரு பகுதி நிதியை தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்படியான அரச விதிமுறைகளை அமைத்து பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தனது பரிந்துரையினை அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துரைக்கையில், தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என உறுதியான முடிவை கொண்டிருக்கின்றமை வரவேற்கத்தக்கது. தேர்தல்களும் அடிப்படை உரிமைகளே.

அரசியலமைப்பு சட்டத்தில் கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேர்தல்களும் மக்கள் கருத்தினை தெரிவிப்பதற்கான ஒரு பொறிமுறையாகும்.

கடந்த காலங்களில் நீதித்துறையும் தேர்தல்களை மக்களின் கருத்துச் சுதந்திரத்துடன் தொடர்புபடுத்தி நாட்டில் தீர்ப்புக்களை அளித்துள்ளன.

எனினும், இம்முறையும் அரசாங்கம் தேர்தல்களை பிற்போடுவதற்கான உத்திகளை திணிக்க முற்படுவதாக உணர முடிகிறது. அது நாட்டில் நிலவும் நிதிப் பற்றாக்குறையை பிரதான விடயமாக காட்ட எத்தனிக்கிறது.

நாட்டின் மத்திய அரசிடம் நிதிப் பற்றாக்குறை இருப்பதை ஏற்றால் கூட உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் என்ற வகையில் உள்ளூராட்சி மன்றங்களிடம் அவர்களது வருமானத்தில் இருந்து முறைப்படியான அரச ஒழுங்கு விதிகளை அமைத்துப் பெற்றாவது தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும்.

ஏற்கனவே நாம் உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டத்தினை சபைகளுக்கு சமர்ப்பித்து விட்டோம். அவ்வாறிருப்பினும், முறைப்படியான கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து கிடைக்கப்பெறின், எமது சபைகளில் அக்கோரிக்கையினை சமர்ப்பித்து, எமது வரவு செலவுத் திட்டத்தில் வகை மாற்றத்தினை செய்வதன் ஊடாக பிரதேச சபை என்ற வகையில் மேலதிகமாக தேவையான அனுமதிகளை பெற்று, எம்மால் இயன்ற நிதி உதவியினை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க முடியும்.

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தில் அதிக, நடுத்தர வருமானம் பெறும் சபைகள் இதற்காக பங்களிக்க முடியும்.

உள்ளூராட்சி மன்றங்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளுக்கே நிதிப் பற்றாக்குறை காணப்படுகையில், இது தேவையற்ற பரிந்துரை என எவராவது கூறலாம். அடிப்படையில் கட்டடங்களை கட்டுவதும் வீதிகளை அமைப்பதும் மட்டும் அபிவிருத்தியல்ல. ஜனநாயகத்தினை கட்டியெழுப்புவதும் முக்கிய அபிவிருத்தியாகும்.

தேர்தல்கள் வாயிலாக ஜனநாயகம் வலுவடையும். எனவே, தேர்தல்களையும் அபிவிருத்தியாக கருதி உள்ளூராட்சி மன்றங்களான நாம் முறையான நிர்வாக நடைமுறைகளை வகுத்து, நிதி ஒதுக்குவதில் தடைகளில்லை என்பதை உள்ளூராட்சி மன்றம் ஒன்றின் தவிசாளர் என்ற வகையில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment