முட்டை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்காத தரப்பினர் தொடர்பில், முழுமையான அறிக்கையொன்றை அடுத்த வாரம், அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தக அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலே இது பற்றித் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், அரச வாணிப கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்தியாவிலிருந்து ஒரு தொகை முட்டையை இறக்குமதி செய்து வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் பேக்கர் கைத்தொழில் துறையினருக்காக பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான அனுமதியை பெற்றுக் கொடுப்பதில், சில அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்கின்றனர். இவர்கள் தொடர்பில் வர்த்தக அமைச்சரான நலின் பெர்னாண்டோ அமைச்சரவைக்கு முறைப்பாடு செய்துள்ளார். இதன்போதே ஜனாதிபதி மேற்படி பணிப்புரையை விடுத்துள்ளார்.
எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் முட்டைகளுக்கான கேள்வி அதிகரிக்கும். இச்சந்தர்ப்பத்தில் நாட்டுக்குத் தேவையான போதுமானளவு முட்டைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாமல் போனாலும் அந்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக முட்டை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதே அமைச்சரவையின் ஆலோசனை.
அதற்கிணங்கவே இந்தியாவிலிருந்து ஒரு தொகை முட்டையை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மெலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment