(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் திங்கட்கிழமை (2) முதல் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 23ஆம் திகதி முதல் நாளை வரை சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சை நிமித்தம் எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி முதல் பெப்ரவரி 19ஆம் திகதி வரை மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
உயர் தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர், பெப்ரவரி 20ஆம் திகதி மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி, மார்ச் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.
அதற்கமைய 2022ஆம் ஆண்டுக்கான இறுதி தவணை கல்வி நடவடிக்கைகள் மார்ச் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் தினம் குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 2ஆம் திகதி முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
பெப்ரவரி 16ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இப்பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் மார்ச் 1ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment