(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை (2) இடம்பெறவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான யோசனையை மின் மற்றும் சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளார்.
இரண்டாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மதத் தலைவர்கள் உட்பட பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மின் கட்டணத்தை அதிகரித்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதாக சிவில் அமைப்பினர் அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளனர்.
சட்ட ஆலோசனைகளுக்கு அமைய மின் கட்ணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண அதிகரிப்பை எவரேனும் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தினால் அதனை எதிர்கொள்ள தயார் என மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தொழிற்சங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு மின்னுற்பத்தி மற்றும் மின் கட்டமைப்பு தொடர்பான 20 புதிய திட்டங்களை மின்சாரத்துறை அமைச்சர் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளார். இதற்கமைய 60 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை மின் கட்டணத்தை அதிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத மின் கட்டண பட்டியலில் புதிய மின் கட்டண அதிகரிப்பு உள்ளடக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டண அதிகரிப்புக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில் மின் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மக்கள் பல மணித்தியாலங்கள் இருளில் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு மஹஜர் ஒன்றறை கையளிப்பதற்கு மின்பாவனையாளர் சங்கத்தினர் களனி ரஜமஹா விகாரையில் முன்னிலையில் இருந்து பல இலட்ச பேரின் கையெழுத்துக்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
மின் கட்டண அதிகரிப்பு அவசியமற்றது என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மின்சக்தி அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் இல்லாவிட்டால் பல மணித்தியாலங்கள் இருளில் இருக்க பழகிக் கொள்ள வேண்டும் என்ற தர்க்கம் முறையற்றது.
நியாயமான கட்டண முறைமைக்கு அமைய மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமாயின் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுடன் மின்சாரத்துறை அமைச்சு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான யோசனை இதுவரை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
மின் கட்டணத்தை அதிகரித்தால் அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினர், மின்பாவனையாளர் சங்கம் உட்பட தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. மின்சார சபையின் பரிந்துரை செய்த மின் கட்டண அதிகரிப்புக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை. மின் கட்டண அதிகரிப்புக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அனுமதி வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதும் மின்னுற்பத்தி மற்றும் மின் கட்டண வருமானத்திற்கும் இடையில் 200 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பற்றாக்குறை காணப்படுகிறது.
ஆகவே 2023 ஆம் ஆண்டு மின்னுற்பத்தி செலவுகளை ஈடு செய்ய வேண்டுமாயின் மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை மின்சாரத்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இரண்டாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment