(எம்.மனோசித்ரா)
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான இலங்கையின் திட்டமிடல்களை இம்மாதத்திற்குள் சமர்ப்பிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். அதற்கமைய இம்மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இதற்கான அனுமதியும் கிடைக்கப் பெறும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ரொயிட்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள கடனுதவி தொடர்பில் குறித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி இம்மாதத்திற்கான இலக்கை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றன. இதுவே எமது அடிப்படை இலக்காகும். அதற்கமைய நாம் தற்போது இரு தரப்பு கடன் வழங்குனர்களிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
எமது ஆலோசகர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் நோக்கம், கடன் வழங்குனர்களிடம் கடன் மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாட்டை எட்டுவதாகும். அவர்கள் தொடர்ச்சியாக எம்முடன் தொடர்பில் உள்ளனர்.
அதற்கமைய நாம் எமது கடன் வழங்குனர்களிடமிருந்து சாதகமான பதிலையே எதிர்பார்க்கின்றோம். எமது டிசம்பர் இலக்கு தவறவிடப்பட்டால் அது ஜனவரி வரை காலம் தாழ்த்தப்படும்.
எனினும் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டடில் குறிப்பிடப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அரச தரப்பினர் நிறைவு செய்துள்ளனர். அதற்கமையவே நாம் இம்மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை எதிர்பார்க்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment