(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்தின் புதிய தீர்மானத்திற்கமைய நேற்றையதினம் 100 பொது சுகாதார பரிசோதகர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இது மக்களுக்கான பொது சுகாதார சேவைகளை வழங்குவதில் நேரடியாக தாக்கம் செலுத்தும். எனவே பொது சுகாதார பரிசோதகர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் றோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் 3200 பொது சுகாதார பரிசோதகர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர். இது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும். இவர்களில் 100 பேர் ஓய்வு பெறுகின்றனர். பொது சுகாதார பரிசோதகர்களின் பணிகளில் இது நேரடியாக தாக்கம் செலுத்தும்.
புதிதாக பொது சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு பயிற்சியளிப்பதற்கு இரு வருடங்களேனும் செல்லும். எனவே ஓய்வு பெற்றுள்ளவர்களுக்கான இடைவெளியை நிரப்பி, சேவையை வழங்குவதில் சிக்கல் காணப்படுகிறது.
எனவே சுகாதார துறையைப் போன்று பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கும் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது சிறந்த தீர்மானமாக அமையும்.
எதிர்பாராத வகையில் இடம்பெறும் இந்த ஓய்வு பெறல் காரணமாக எமக்கு சேவையை வழங்குவதில் பாரிய நெருக்கடி ஏற்படக் கூடும்.
சேவைகளில் மாத்திரமின்றி பயிற்சியளித்தல் உள்ளிட்ட விடயங்களில் இது தாக்கம் செலுத்தும். அனுபவம் மிக்க சிரேஷ்டத்துவமுடையவர்களே ஓய்வு பெறுகின்றனர். எனவே புதிதாக உள்வாங்கப்படுபவர்களுக்கு பயிற்சியளிப்பதில் இது தாக்கம் செலுத்தும் என்றார்.
No comments:
Post a Comment