முன்னாள் பிரதமருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம் : அவுஸ்திரேலிய வரலாற்றில் இதுவே முதல் தடவை - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 29, 2022

முன்னாள் பிரதமருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம் : அவுஸ்திரேலிய வரலாற்றில் இதுவே முதல் தடவை

அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசனுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவுஸ்திரேலிய வரலாற்றில் முன்னாள் பிரதமர் ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

2018 ஆகஸ்ட் முதல் 2022 மே வரை அவுஸ்திரேலியாவின் பிரதமராக பதவி வகித்தவர் ஸ்கொட் மொரிசன்.

பிரதமராக அவர் பதவி வகித்தபோது, கொவிட்19 பரவல் காலத்தில், பல முக்கிய அமைச்சுகளுக்கு தன்னைத்தானே இரசியமாக நியமித்துக் கொண்டிருந்தமை பின்னர் தெரிய வந்தது.

நிதி, உள்துறை, திறைசேரி, வளங்கள், விவசாயம், சுற்றாடல் ஆகிய துறைகளுக்கான அமைச்சராக இரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து, 2 வருடங்கள் அப்பதவியை வகித்திருந்தார்.

இது தொடர்பில், நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சர்களுக்கோ, பொதுமக்களுக்கோ அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், மேற்படி இரகசிய நியமனங்கள் தொடர்பில் ஸ்கொட் மொரிசனுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் இன்று நிறைறேற்றப்பட்டது.

86 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50 பேர் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அவுஸ்திரேலிய ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அரிக்கச் செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலிய பொதுமக்களிடம் ஸ்கொட் மொரிசன் மன்னிப்பு கோர வேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானீஸ் கூறியுள்ளார்.

54 வயதான ஸ்கொட் மொரிசன், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment