திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பொது வைத்தியசாலையும் 'A' தரத்திலான நான்கு தள வைத்தியசாலையும் ஏனைய வைத்தியசாலைகளும் காணப்படுகின்றன. கிண்ணியா, மூதூர், புல்மோட்டை வைத்தியசாலைகள் கடந்த காலங்களில் தரமுயர்த்தப்பட்டாலும் தேவையான போதுமான வசதிகள் தற்போது குறைவாகவே காணப்படுகின்றது பொறுப்பான அமைச்சர் அதற்கான வசதிகளை பெற்றுத்தருவதை உறுதிப்படுத்த வேண்டும் என இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
பாராளுமன்றில் நடைபெற்ற சுகாதார அமைச்சு சம்பந்தமான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், கிண்ணியா வைத்தியசாலை தற்போது இடப் பற்றாக்குறையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது, அங்கு X-Ray இயந்திரம் கிடைக்கப் பெற்ற போதிலும் X-Ray பிரிவினை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
இதனால் அங்கு வருகின்ற நோயாளிகள் பல கிலோ மீட்டர் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதனால் அரசாங்கம் அவசரமாக X-Ray பிரிவினை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அதிகூடிய சனத் தொகையைக் கொண்ட பிரதேசமாக காணப்படுகின்றமையால் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினை தோப்பூர் பிரதேசத்தை மையமாக கொண்டு புதிய அலுவலகம் அமைக்க வேண்டும்.
அத்துடன் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தற்காலிக கட்டத்தில் காணப்படுவதால் அதற்கான நிரந்தர கட்டிடத்தையும் அதற்கான வாகன வசதிகளையும் ஏற்படுத்தித் தருமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில், திருமலை மாவட்டத்தில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. தற்போது சிறு வயதினர் உட்பட புற்று நோயாளர்கள் மரணம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்ற தொலைத் தொடர்பு கோபுரங்களா? என்று மக்கள் சந்தேகின்றனர்.
ஆகவே திருமலை மாவட்டத்தில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதற்கான காரணம் என்னவென்பதை கண்டறிய விஷேட குழுவென்றினை அமைக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment