(எம்.எப்.எம்.பஸீர்)
அரசாங்கத்தின் அடக்குமுறை போக்கை உடனடியாக நிறுத்தக் கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், கொழும்பில் இன்று புதன்கிழமை (2) பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்ற நிலையில், பொலிஸாரால் அதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது.
எதிர்ப்புப் பேரணி மருதானையில் ஆரம்பமான நிலையில் கோட்டை ரயில் நிலையம் நோக்கிச் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் பொலிஸார் புறக்கோட்டை - மிதக்கும் சந்தையை ஒட்டியுள்ள சந்தைப் பகுதியுடன் பிரதான வீதியை நடைபாதையுடன் சேர்ந்து முற்றாக மூடி இடையூறு ஏற்படுத்தினர்.
இலங்கையின் குடிமக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற அரசியல் முடிவுகளாலும், பரவலாக நடைபெறும் ஊழல்களாலுமே இப்பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டதாக பல்வேறு சுலோகங்கள் ஊடாக வெளிப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சட்டங்களை உடனடியாக மீளப் பெற்று, ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினர்.
மருதானை எல்பிஸ்டன் திரையரங்கம் அருகே இருந்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமானது.
'அடக்குமுறையை நிறுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு' எனும் பிரதான தொனிப் பொருள் அடங்கிய பதாகையின் பின்னே ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டை நோக்கி தொழில்நுட்ப சந்தி ஊடாக முன்னேறினர்.
இந்த பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட அக்கட்சி முக்கியஸ்தர்கள், சந்திம வீரக்கொடி உள்ளிட்ட அரசியல் தரப்பினர் என பல தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.
அரசியல் தலைமைகளுக்கு மேலதிகமாக, நூற்றுக்கணக்கான தொழிற்சங்கத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, 43 ஆம் படையணி, சுதந்திர மக்கள் சபை உள்ளிட்ட சுமார் 20 அரசியல் கட்சிகளும் சுமார் 150 தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள் பிரதான பதாதையை ஏந்தி முன்னோக்கி பயணித்த நிலையில் அதன் பின்னே ஆர்ப்பாட்டக்காரர்கள் பயணித்தனர்.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான பொலிஸாரை கொண்டு புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகே உள்ள சந்தைப் பகுதியில் பிரதான பாதையை மூடி, நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்ய பொலிசார் தயாராக இருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தை மறித்து இடையூறு விளைவித்தனர்.
பொலிஸ் மனிதச் சங்கிலி வேலியை கண்டு முன்னே சென்ற அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் அவ்விடத்தில் தரித்து நின்ற நிலையில், பின்னால் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸாரை மீறி கோட்டை நோக்கி செல்லுமாறு அரசியல்வாதிகளை வலியுறுத்தினர்.
இதனால் அவ்விடத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வைத்து அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்டத்தில் இருந்தோரை நோக்கி உரையாற்ற முனைந்த போதும், திட்டமிட்டபடி முன்னோக்கி செல்லாது அவ்விடத்தில் நின்றதால் அதற்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.
இதனால் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அங்கிருந்து எதிர்ப்புக்கு மத்தியில் வெளியேற வேண்டி ஏற்பட்டது.
எனினும் ஹிருணிகா பிரேமச்சந்திர, முஜிபுர் ரஹ்மான் போன்ற அரசியல் பிரமுகர்கள், இறுதி வரை ஆர்ப்பாட்டக் காரர்களுடன் அவ்விடத்திலிருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனைவிட, முன்னிலை சோஷலிஷக் கட்சியினர், தொழிற்சங்க பிரதி நிதிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அவ்விடத்தில் மாலை 6.10 மணி வரை நின்றனர்.
ஒரு கட்டத்தில் கலக தடுப்பு பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை பின் நோக்கி நகர்த்த முற்பட்டாலும் அது சிறிது தூரத்துக்கு அப்பால் சாத்தியமற்று போனது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், அரசியல் தலைமைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், ஜனாதிபதி ரணிலுக்கு எதிராகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் தொடர்ச்சியாக சுமார் இரண்டரை மணி நேரம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதன் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.
பொலிஸார் எந்த அறிவித்தலும் இன்றி, நீதிமன்ற உத்தரவும் இன்றி பிரதான வீதியை மறித்ததால், கொழும்பு எங்கும் இன்று மாலை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதனால் அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு வீடு செல்ல முனைந்தவர்கள், ஏனைய பயணங்களை முன்னெடுப்போர் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment