முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தவறாக வழிநடத்துபவர்கள் இன்னமும் சூழ்ந்துள்ளார்கள் என்று உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் கூறியதாவது, கோட்டாபய ராஜபக்ஷவை சூழ்ந்திருந்தவர்கள் தவறாக வழி காண்பித்தாலேயே அவர் பதவியைத் துறக்க வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டது.
தற்போது அவ்வாறானவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளபோதும் இன்னமும் அவரைச் சூழ்ந்து கொண்டு வெவ்வேறு கதைகளை கூறிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களில் சிலர் தமது எதிர்காலத்திற்காக மீண்டும் அவரை அரசியலுக்குள் அழைத்து வரவும் விரும்புகின்றார்கள்.
ஆனால் அவர் அரசியல்வாதியாக தோல்வி கண்டுவிட்டார். அதனால் அவரால் முழுமையான அரசியல்வாதியாக எதிர்காலத்தில் செயற்படுவார் என்று கூற முடியாது. அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.
இருப்பினும் அவரைச் சூழ்ந்துள்ளவர்கள், தற்போதும் முக்கிய பதவிகளில் உள்ளவர்களை பாதுகாப்பதற்கு தலையீடுகளைச் செய்வதற்கு பயன்படுத்துகின்றார்கள். ஆகவே, கோட்டாபய ராஜபக்ஷ முதலில் தன்னை தவறாக வழிநடத்திய அணியிடமிருந்து விடுபட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறுவதன் ஊடாகவே அவர் தற்போது முகங்கொடுக்கும் நெருக்கடிகளை தவிர்க்க முடியும்.
குறிப்பாக, அவர் மக்களைச் சந்திக்காது உள்ளார். அண்மையில் தங்காலையில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தின் போது தான், ராஜபக்ஷக்கள் மீது என்றும் அன்புள்ள மக்களை சந்தித்து சற்று உரையாடியுள்ளார்.
அவர், மக்களைச் சந்திப்பதற்கு தயங்காது, பொதுமக்களுக்கு முகங்கொடுக்க வேண்டும். அதேநேரம், அவர் மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
உக்ரைனில் அந்நாட்டு ஜனாதிபதிக்கு நடைபெற்ற விடயங்களின் அனுபவத்திலேயே கோட்டாபயவை ஜுன் மாதத்தில் எச்சரித்தோடு, அவரை விமர்சித்தும் இருந்தேன்.
அவர் எந்த விதமான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாது. மஹிந்த ராஜபக்ஷவை பதவியிலிருந்து நீக்கியதும், தொடர்ந்தும் தவறான முகாமிற்குள்ளே இருந்ததும்தான் அவரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வித்திட்டது.
அவர், பொதுஜன பெரமுனவின் தலைமையினை ஏற்று கட்சியுடன் இணைந்திருந்தால் கூட இவ்வளவு நிலைமைகள் ஏற்பட்டிருக்காது என்றும் மேலும் தெரிவித்தார்.
உதயங்க வீரதுங்க, கோட்டாபயவின் உடன்பிறவாத சகோதரர் என்பதோடு முன்னாள் ரஷ்யாவுக்கான தூதுவராகவும் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment