கம்பஹா மாவட்டம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்குவதை தடுக்கும் வகையில் மும்முனை வேலைத்திட்டம் தயாரிப்பு : காணி மறுசீரமைப்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தூய்மை செய்யும் பணிகளை ஆரம்பித்தது - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 2, 2022

கம்பஹா மாவட்டம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்குவதை தடுக்கும் வகையில் மும்முனை வேலைத்திட்டம் தயாரிப்பு : காணி மறுசீரமைப்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தூய்மை செய்யும் பணிகளை ஆரம்பித்தது

முனீரா அபூபக்கர் 

கம்பஹா மாவட்டம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்குவதை தடுக்கும் வகையில் மும்முனை வேலைத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. இதன்படி குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

குறுகிய கால திட்டத்தின் கீழ், 71 தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் சுத்தம் செய்ய அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடங்கள் தண்ணீர் வெளியேறும் வகையில் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து இதனை நடைமுறைப்படுத்துகின்றன.

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள 159 கிராம சேவை பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் உள்ள 159 கிராம சேவைப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 11,157 ஆகும். 46,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் முழுமையாகவும் 25 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கு அமைய, அந்த காலப்பகுதியில் இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ கூட்டத்தில், கம்பஹா மாவட்டத்தை எதிர்காலத்தில் வெள்ளம் சூழ்ந்துவிடாமல் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, அமைச்சரின் கீழ் உள்ள காணி மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

முதற்கட்டமாக கம்பஹா மாவட்டத்தின் ஜா ரு கால்வாய், களுகொடுவ கால்வாய், குந்தி கால்வாய், களுகொல கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ள கால்வாய்கள் மற்றும் பல்லேவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கால்வாய்கள் என்பன சுத்தப்படுத்தப்படவுள்ளன.

அதற்கான செலவு 18 மில்லியன் ரூபா. நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடுத்தர மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்வதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தேவையான திட்டங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment