போராட்டம், வன்முறைகளுடன் சம்பந்தப்பட்ட அப்பாவி பிள்ளைகள் இருப்பதாகவும் அந்த பிள்ளைகளை விளக்கமறியலில் வைத்து தண்டிப்பது மற்றும் பொலிஸ் அறிக்கையை வழங்கி, அவர்கள் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவிருக்கும் சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்வது தவறு எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு செயலகம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் வெலிமடையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாமல் எம்.பி இதனை கூறியுள்ளார்.
போராட்டத்தை வழி நடத்தியவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உதவி, ஒத்தாசைகளை வழங்கியவர்களுக்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். எனினும் போராட்டம் என்ற அலைக்கு ஏமாந்து சென்ற பல பிள்ளைகள் உட்பட தவறாக வழிநடத்தப்பட்ட பல பிள்ளைகளும் இருக்கின்றனர்.
அதேபோல், போராட்டத்தை பார்க்கச் சென்ற பலரும் இருக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரயோசனமில்லை. போராட்டம் என்ற அலை காரணமாக அதில் கலந்துகொண்ட பிள்ளைகளை வெறுமனே கைது செய்து சிறையில் அடைப்பது பலனளிக்காத விடயம்.
இந்த பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு செல்ல பொலிஸ் அறிக்கைகளை பெற முடியாத நிலைமையை ஏற்படுத்தினால், அது நியாயமானது அல்ல. இதனால், போராட்டத்திற்கு ஏமாந்து வழி தவறிய இளைஞர்களை ஒரு வேலைத்திட்டத்தின் ஊடாக சமுகமயப்படுத்த வேண்டும்.
நாட்டில் சுதந்திரம் இருப்பது போல் நாட்டை பாதுகாப்பான நாடாக மாற்ற வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தியதை நாம் கடந்த காலத்தில் பார்த்தோம். எமது வீடுகளை தீயிட்டால் பரவாயில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவரையும் தாக்கினர்.
கொள்ளைச் சம்பவங்கள், கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதுடன் பாதாள உலக குழுவினர் தலைதூக்கியுள்ளனர். இவற்றை அடக்கி ஒடுக்கவில்லை என்றால் இந்த நாடு என்றுமே பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்ல முடியாது.
மேலும் தமது வீடு, தமது மனைவியின் வீடு, தமது தந்தையின் வீடு உட்பட வீடுகளுக்கு தீவைக்கும் சம்பவங்களை வழிநடத்திய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment