நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருக்கும் வரை சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்ந்து நெருக்கடிகளை எதிர்கொள்ளும். பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக சிங்களவர்கள் குரல் கொடுக்கின்றனமை வரவேற்கத்தக்கது. இன அழிப்புக்காக பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் தற்போது அரசியல் பழிவாங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றனமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்த பிறகு அனைத்து கட்சித் தலைவர்கள் மாநாட்டை முன்னின்று நடத்தினேன். அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்கு எதிராக அடக்கு முறை கட்டவிழ்த்துப்பட்டதால் 30 வருட கால யுத்தம் தோற்றம் பெற்றது, ஆகவே தமிழர்களுக்கு முரண்பாடற்ற வகையில் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தேன்.
அத்துடன் யுத்தம் முடிவடைந்து விட்டது ஆகவே பயங்கரவாத தடைச் சட்டம் அவசியமற்றது என்பதால் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறும், சிறை பிடிக்கப்பட்ட விடுதலை புலிகளின் போராளிகளை மீண்டும் சமூகமயப்படுத்த புதிய சட்டங்களை இயற்றுமாறும் பரிந்துரைத்தேன்.
சர்வ கட்சி கூட்டத்தினை தொடர்ந்து எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணியை தவிர்த்து ஏனைய அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்தன.
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டால் மாத்திரமே தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற பரிந்துரையை முன்னிலைப்படுத்தி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முழுமையான அறிக்கை சமர்ப்பித்தேன்.
யுத்த வெற்றியை தொடர்ந்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது குறித்து மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தினாரே தவிர அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற அவதானம் செலுத்தவில்லை. அறிக்கையை கிடப்பில் போட்டார்.
இனப் பிரச்சினைக்கு கட்டாயம் தீர்வு வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இனவாதத்தை முன்னிலைப்படுத்திய அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இனவிரோத செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்துக்கு பாரிய தடையாக காணப்பட்டது.
தமிழ், முஸ்லிம் சமூகத்தின் மீது தாக்கம் செலுத்திய பயங்கரவாத தடைச் சட்டம் தற்போது சிங்களவர்களுக்கு எதிராகவும் திரும்பியுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என பெரும்பான்மை சமூகமும் குரல் கொடுப்பது வரவேற்கத்தக்கது. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க முடியும்.
இன அழிப்புக்காக பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் தற்போது அரசியல் பழிவாங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் வரை சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்ச்சியாக நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என்றார்.
No comments:
Post a Comment