(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உணவைப் பெற்றுக் கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை இனங்கண்டு, அவர்களுக்கு நிதி நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் எந்தவொரு பிரஜையும் பட்டிணியால் உயிரிழப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றபோது, பொருளாதார நெருக்கடிகளால் உணவைப் பெற்றுக் கொள்ள முடியாமலுள்ள மக்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வினவப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார நெருக்கடிகளால் உணவைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் இருந்தால் அது தொடர்பில் அரசாங்கத்திற்கு அறிவிக்குமாறு சகல கிராம உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பிரஜையும் பட்டிணியால் உயிரிழப்பதற்கு இடமளிக்க முடியாது என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும்.
நாடளாவிய ரீதியில் இவ்வாறு உணவைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட அதிபர்கள் ஊடாக தகவல்களை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை இணங்கண்டு அவர்களுக்கு நிதி நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment