(இராஜதுரை ஹஷான்)
இடைக்கால ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க தனது எண்ணங்களை அரச கொள்கையாக குறிப்பிடுவதற்கு அவருக்கு மக்களாணை கிடையாது. ஏனெனில் அவர் மக்களாணைக்கு முரணாகவே தெரிவு செய்யப்பட்டார். 69 இலட்சம் மக்களாணையுடன் ஆட்சியமைத்த ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பிய மக்கள் போராட்டத்தின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக் கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.
நாவல பகுதியில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட இடைக்கால ஜனாதிபதியாகவே பதவி வகிக்கிறார். ஜனாதிபதி ஒருவர் மக்களால் தெரிவு செய்யப்பட வேண்டும், ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் ஏற்படும் போது பாராளுமன்றத்தினால் இடைக்கால ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும் என அரசியலமைப்பின் 32ஆவது உறுப்புரையில் ஜனாதிபதியின் தெரிவு தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேரடி மக்களாணை கிடையாது. மறைமுக மக்களாணையுடனே அவர் தெரிவு செய்யப்பட்டார்.
தேர்தல் முறைமை மாற்றியமைக்கும் அதிகாரத்தை யார் வழங்கியது என ஜனாதிபதியிடம் வினவினால், நான் நேற்றிரவு உறங்கும் போது கனவில் அவ்வாறு கண்டேன் என ஜனாதிபதியால் குறிப்பிட முடியும். தனது எண்ணங்களை கொள்கையாக ஜனாதிபதியால் குறிப்பிட முடியாது.
தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதாக சுபீட்சமான எதிர்கால கொள்கைத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தல்களின் போதும் இது குறிப்பிடப்படவில்லை. ஆகவே இடைக்கால ஜனாதிபதி கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் போது தூரநோக்குடன் சிந்திக்க வேண்டும்.
தேர்தலை நடத்துவதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்புவதில்லை. நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை திட்டமிட்ட வகையில் பிற்போட்டது. இன்று வரை மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் சட்ட சிக்கல் காணப்படுகிறது.
அரசியல் சூழ்ச்சியால் தேர்தலை பிற்போட முயற்சிக்கும் போது அதன் தாக்கத்தை உரிய தரப்பினரே எதிர்கொள்ள வேண்டும். மாகாண சபைத் தேர்தலை பிற்போட்ட காரணத்தினால்தான் ஐக்கிய தேசிய கட்சியை நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியாக புறக்கணித்தார்கள்.
நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளங்கிக் கொள்ள வேண்டும்.
மக்கள் போரட்டம் 69 இலட்சம் மக்களாணையுடன் ஆட்சியமைத்த ஜனாதிபதியையும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனான அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்பியது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்துக்கு எதிரான அடக்குமுறையை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment