தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது : பாரிய நிதி சுமையைக் குறைப்பதற்கான யோசனையாகவே ஜனாதிபதி பரிந்துரை - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 11, 2022

தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது : பாரிய நிதி சுமையைக் குறைப்பதற்கான யோசனையாகவே ஜனாதிபதி பரிந்துரை - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவடையாது. தேர்தல் முறைமையை மாற்றத்தின் ஊடாக, தெரிவுக்குழுவினால் அதற்குரிய பொறுத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்நடவடிக்கை மூலம் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான எந்தவொரு தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற போது, உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. அவற்றுக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்குள் உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 ஆகக் காணப்படுகிறது. இதற்கான செலவுகள் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத பாரிய சுமையாகக் காணப்படுகிறது.

எனவேதான் இந்த பாரிய நிதி சுமையைக் குறைப்பதற்கான அடிப்படை யோசனையாக உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.

அத்தோடு உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களுக்கு அவற்றைக் கொண்டு செல்வதற்கு தனி அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்த நிலைமையை மாற்றியமைத்து அதிகாரம் அனைவருக்கும் கிடைக்கப் பெறும் வகையில், குழுக்களின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதற்காக சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.

இந்த யோசனைகளை தெரிவுக்குழுவில் முன்வைத்து, அவற்றின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டால் மாத்திரமே சர்வசன வாக்கெடுப்பிற்குச் செல்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேர்தலை நடத்திய பின்னர், எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் இந்த பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றதே தவிர, அவற்றின் மூலம் பிரிதொரு பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்ள நாம் தயாராக இல்லை. நீண்ட காலமாகக் காணப்படும் உள்ளுராட்சி சபைகளுக்கான பாரிய செலவுகளைக் குறைப்பதற்காகவே சர்வசன வாக்கெடுப்பிற்குச் செல்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

8000 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால், அவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு ஊதியத்தை செலுத்த வேண்டும். எனவே உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதால் செலவுகளையும் கட்டுப்படுத்த முடியும். இதற்கான யோசனைக்கு தெரிவுக்குழு அனுமதி வழங்காவிட்டால் மாத்திரமே சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்ல நேரிடும். மாறாக தெரிவுக்குழு அனுமதி வழங்கும் பட்சத்தில் சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டியேற்படாது.

8000 உறுப்பினர்களுக்கான நீண்ட கால செலவை விட, சர்வசன வாக்கெடுப்பினை நடத்துவதற்கான செலவு வரையறுக்கப்பட்டதாகவே இருக்கும்.

உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதால் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் முறைமையை மாற்றுவதன் ஊடாக, தெரிவுக்குழுவினால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்நடவடிக்கைகள் மூலம் தேர்தலை காலம் தாழ்த்தும் அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.

No comments:

Post a Comment