(எம்.வை.எம்.சியாம்)
அரசாங்கத்திற்கு எதிராக கடந்த காலங்களிலும் தற்போதும் தொடர்ச்சியாக போராட்டக் களத்தை வழிநடத்துவர்களையும் கைது செய்ய வேண்டும். மேலும் பேராட்டக்களத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை கைது செய்து தடுத்து வைப்பதை விடுத்து அவர்களுக்கு ஏதேனும் வேலைத்திட்டத்தின் ஊடாக அவர்களை சமூகமயப்படுத்தல் வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் ஒன்று வெலிமடை - நுகதலாவை பகுதியில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், போராட்டக்காரர்களுக்கு புனர்வாழ்வு பணியகங்களை அமைக்கும் செயற்திட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு எதுவித யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை.
போராட்டக்களம் தொடர்பில் அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதனை நாம் உணர வேண்டும்.
மேலும் எனது வீட்டிற்கு தீ வைப்பதற்காக வருகை தந்திருந்தார்கள். எனது மனைவி வீட்டிற்கும் தீ வைத்தனர். அதனை வழி நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அவர்கள் வெளியில் சுதந்திரமாக இருக்கும் பொழுது அதற்கு ஆதரவு வழங்கிய இளைஞர்களை கைதும், தடுத்து வைப்பதும் பயனற்ற விடயமாகும்.
போராட்டக்களத்தை வழிநடத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்களை ஏதேனும் ஓர் வேலைத்திட்டத்தின் ஊடாக அவர்களை சமூகமயப்படுத்தல் வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment